ஸ்தம்பித்த சென்னை டூ செங்கல்பட்டு..மறைமலை நகரில் ரயிலுக்கே கேட் போட்ட மக்கள்.. நேற்று என்ன நடந்தது?
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான மறைமலை நகரில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரயில்வே கேட் திறக்கப்படாததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் செங்கல்பட்டு சென்னை வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
சென்னையில் ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கு அருகில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கண்டிப்பாக இருக்கும்.. ஆனால் புறநகர் பகுதிகளில் அப்படி இல்லை..பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் இருக்கிறது. ஆனால் மறைமலைநகர் பகதியில் உள்ள பேரமனூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் எல்லாம் இல்லை. இந்த ரயில்வே கேட் வழியாகவே

மறைமலைநகரை அடுத்த திருக்கச்சூர், சட்டமங்கலம், ஆப்பூர், பேரமனூர், வளையக்கரணை, சேந்தமங்கலம், வடக்குபட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் வாகனத்தில் சென்று வருகிறார்கள். பொதுவாவே ரயில் வரும் போது கேட் மூடப்படும். ஒரு ரயில் போன பின்னர் சிறிது நேரம் ரயில்வே கேட் திறக்கப்படும். 10 நிமிடத்திற்கு ஒருமுறை கேட் திறக்கப்படுவதும், மூடப்படுவதுமாக இயங்கி வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் ரயில்கள் செல்வதற்காக பேரமனூர் ரயில்வே கேட்டை ஊழியர் மூடியிருக்கிறார். மூடப்பட்ட ரயில்வே கேட் நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.. பேரமனூர் ரெயில்வே கேட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றுள்ளது.
இதனிடையே ரயில்வே கேட்டை கடப்பதற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அங்கிருந்த ரயில்வே ஊழியர் 1 மணி நேரத்துக்கு மேலாக கேட் திறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.. இதற்கு ஊழியர் சரியான பதில்தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயிலை செல்லவிடாமல் மறித்து போராட்டத்தில் குதித்தனர். பீக் அவர்ஸ் நேரம் என்பதால் சென்னையில் புறநகர் பகுதி நோக்கி வந்த ரயில்கள் எல்லாம் அப்படியே ஸ்தம்பத்தின, இதையடுத்து அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சில பராமரிப்பு பணிகள் நடைபெற்ற காரணத்தினால் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டது இதனால் தான் ரயில்வே கேட் திறக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.
ஆனால் அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து ரயில் முன் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் மற்றும் தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். கேட்டை திறந்தால் ரயிலை விடுவதாக பொதுமக்கள் கூறினார்கள்.
இதை தொடர்ந்து உடனடியாக ரயில்வே கேட் திறக்கப்பட்டதால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து வாகனங்களில் தங்களது கிராமங்களுக்கு புறப்பட்டு சென்றார்கள். இந்த ரயில் மறியல் போராட்டத்தில் காரணமாக தாம்பரம்-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-தாம்பரம் ஆகிய இரு மார்க்கத்திலும் வந்த மின்சார ரெயில்கள் சேவை நேற்று மாலை கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் ரயிலில் வந்த பயணிகள் மிகவும் அவதியடைந்தனர். இந்த சம்பவத்தால் மறைமலைநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications