கவனிச்சீங்களா.. திடீர்னு "ஐஸ்" பாஜகவுக்கு.. "கனத்த இதயத்துடன்" அப்பாவு அதிரடி.. என்ன நடந்தது?
பாஜகவினரை புகழ்ந்து, அதிமுகவை சாடி பேசினார் சபாநாயகர் அப்பாவு
சென்னை: இன்று அதிமுகவினரை அவையில் இருந்து வெளியேற்றியது ஏன் என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் தந்துள்ளார்.
தஞ்சாவூரை அடுத்துள்ள களிமேடு அப்பர் கோயிலில் சித்திரை தேர் திருவிழாவில் எதிர்பாராத சோகம் ஏற்பட்டுள்ளது.. உயர் மின் அழுத்த கம்பி மீது தேர் உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் 2 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்... இன்று காலையில், இந்த அதிர்ச்சியை கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

கவன ஈர்ப்பு தீர்மானம்
உயிரிழந்தவர்கள் சார்பில் இழப்பீட்டு தொகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.. இதனிடையே, தமிழக சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.. அப்போது,திருவிழா காலங்களில் போதிய பாதுகாப்பு இல்லை, திருவிழா காலங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றச்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்...

அதிமுக
பேரவையில் அதிமுகவினர் தர்ணாவில் ஈடுப்பட்டதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அவைக்குள்ளேயே அமர்ந்து அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது... இதனை தொடர்ந்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.. பிறகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடு போதாது என்று பாஜகவும் குறை சொல்ல ஆரம்பித்தது..

அவைக்காவலர்கள்
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் மூலமாக வெளியேற்றியது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். "காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை தவறாக எதையும் பேசவில்லை, மகாமகம் விபத்து குறித்து அம்மையார் பேசி அவை குறிப்பில் உள்ளதை தான் பேசி இருப்பதாக சொன்னாரே தவிர, செல்வபெருந்தகை தன்னுடைய தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்கவில்லை.

முழக்கம்
அவை விதிகளின்படி வெளிநடப்பு செய்த பின்பு மறுபடியும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசமுடியாது.. அப்படி இருந்தும், நான் அனுமதி கொடுப்பதாக தெரிவித்தும் அதிமுக உறுப்பினர் முழக்கமிட்டனர்.. இந்த சபை நாகரீகமாக நடக்கிறது.. எதிர்கட்சிகளுக்கு தாராளமாக அனுமதி கொடுத்து பேச அனுமதிக்கப்படுகிறது.. இந்த அரசு பதவியேற்று ஓராண்டு ஆகிவிட்டது. தமிழகத்தில் எந்த பகுதியிலும் மதத்தை வைத்து அரசியல் செய்யவில்லை..

நெருடல்
அவ்வளவு ஏன், பாஜக உறுப்பினர்கள் கூட தங்களது கருத்துகளை நியாயமான முறையில் பதிவு செய்துள்ளனர்... அமைதியாகவும், நல்லிணக்கமாகவும் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று நம்முடைய ஆளுநரே சொல்லியிருக்கிறாரே.. அதனால், ஆளும் கட்சியினர் பேசும்போது கூட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நெருடல் இல்லாமல் பேச வேண்டும் என்று தான் முதல்வர் சொல்லி உள்ளாரே தவிர, நாகரிகமாக அவை நடந்துகொண்டுள்ளது.. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அதிகமாகவே நேரம் தரப்படுகிறது.

கனத்த இதயம்
ஆனால், சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, கோவிந்தசாமி ஆகியோர் அமைச்சரை ஒருமையில் பேசியது வருத்தமளிக்கிறது.. அதனால்தான், கனத்த இதயத்தோடு தான் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டேன்.. இது முதல்முறையாக நடைபெறும் நிகழ்வு என்பதால் மன்னித்து விடலாம் என எண்ணுகிறேன்.. இன்று நடந்தது இன்றோடு போகட்டும், இனி வரும்காலங்களில் இது போன்ற வரம்பு மீறிய செயல்கள் நடக்ககூடாது" என்று அப்பாவு விளக்கமும், அறிவுரையும் தந்தார்.












Click it and Unblock the Notifications