‘பிக்பாஸ்’க்கு விஜய் சேதுபதி போனது ஏன்? மனக் கஷ்டத்தில் சீனு ராமசாமி? என்ன காரணம்?
சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் தான் மனக் கஷ்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு என்ன காரணம்? யார் காரணம்?
இயக்குநர் சீனு ராமசாமியின் மிகப்பெரிய அடையாளம் விஜய் சேதுபதி. இவர்தான் 'தென்மேற்கு பருவக்காற்று' மூலம் அவரை அறிமுகம் செய்தார். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் என்ற உயரத்திற்கு விஜய் சேதுபதி உயர்ந்துவிட்டார். எந்த மேடைகளிலும் தனது இயக்குநரை விஜய் சேதுபதி விட்டுக் கொடுத்ததே இல்லை. தொடர்ந்து 'தர்மதுரை' , 'மாமனிதன்' என சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். அந்தளவுக்கு இவர்களின் நட்பு தொடர்கிறது. தமிழ் சினிமா அறிமுகம் செய்தவரை அடுத்த நாளே காலை வாரும் உலகம். அதில் இப்படி மதிக்கத் தக்க உறவுகளும் இருக்கின்றன.

இப்போது சீனு ராமசாமி இயக்கத்தில் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' திரைக்கு வர இருக்கிறது. இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்து பல விசயங்களைப் பேசியுள்ளார். சீனு ராமசாமி பேசுகையில், "உலகத்தில் பல நாடுகளில் சினிமாவுக்கு இடைவேளை என்பதே கிடையாது. குறிப்பாக சொன்னால், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் எந்தப் படத்திற்கும் இடைவேளை கிடையாது. இந்த இடைவேளைதான் பிரச்சினை.
அது மட்டும் இல்லை என்றால் ஒன்றரை மணிநேரத்திற்குள் படமே முடிந்துவிடும். ஒரு நாளைக்கு 5 ஷோக்கள் திரையிடலாம். படங்களில் தேவை இல்லாத காட்சிகளைக் குறைத்து கதைக்குத் தேவை என்னவோ அதை மட்டுமே காட்சியாக வைக்க முடியும். இதை எல்லாம் வருங்கால சினிமாவில் செய்ய வேண்டிய மாற்றம். உடனே முடியுமா என்று தெரியவில்லை.
ஹாலிவுட் படங்கள் ஹவாய் தீவு பகுதியில் எடுக்கிறார்கள். அது காடு கிடையாது. சினிமா எடுப்பதற்காகவே பாதுகாப்பாக ஒரு காட்டை வைத்திருக்கிறார்கள். அதற்குள் போய் படம் எடுக்கிறார்கள். அதைப் பார்த்தால் இயற்கையாக இருக்கிறது. அப்படி ஒரு காடு இந்தியாவில் படம் எடுப்பதற்காக என்று தனியாக இல்லை. செட் போட்டுத் தான் எடுக்க வேண்டும். அதில் எனக்கு விருப்பம் இல்லை. நான் லொகேஷனை பார்த்துவிட்டு வந்துதான் திரைக்கதை எழுதுவேன். திரைக்கதை எழுதி விட்டு லொகேஷன் தேடி அலையமாட்டேன்.

ஒரு கடலையோ ஒரு ஏரியையோ செட் போட்டு எடுக்க முடியாது. அதை இயற்கையாகக் காட்ட வேண்டும். அதையே மக்கள் ரசிப்பார்கள். பலரும் நான் கிராமத்தைப் பற்றி மட்டுமே படம் எடுப்பதாக நினைக்கிறார்கள். நான் சென்னையைப் பற்றி 3 கதைகள் எழுதி வைத்துள்ளேன். அதைப் படமாக எடுக்க வேண்டிய சூழல் அமையாமல் தள்ளித் தள்ளிப் போகிறது" என்று பேசி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "நான் 'இடம் பொருள் ஏவல்' என்று ஒரு படத்தை எடுத்து சில வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் திரைக்கு வரவே இல்லை. மனதளவில் அது என்னை அதிகம் பாதித்தது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த படம். அது இன்னும் வெளியே வராமல் முடங்கிக் கிடப்பது கவலையாக இருக்கிறது. தயாரிப்பாளர் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு அதை வெளியிடுவதில் ஒரு சின்ன சிக்கல்தான் இருக்கிறது. அவர்களுக்கு இருந்த பல பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டனர். பலரும் அது தெரியாமல் ஏதோ வதந்தியைப் பரப்பி வருகிறார்கள்.
அவர்கள் பாதிக் கடனை அடைத்துவிட்டார்கள். அதான் உண்மை. வேறு ஏதேனும் நிறுவனம் என் படத்தை வாங்கி வெளியிட்டால் உடனே திரைக்கு வரும். 10 நாட்கள் முன்னதாகக் கூட படத்தைப் போட்டுப் பார்த்தேன். ஃபிரெஷ் ஆக இருக்கிறது. விஜய் சேதுபதி நன்றாக நடித்துள்ளார். அந்தப் படம் வெளிவந்தால் எனக்கு ஒரு பெயர் நிச்சயம் கிடைக்கும்" என்றவர் விஜய் சேதுபதியை வைத்துத் தொடர்ந்து படம் இயக்குவது என்பதற்காகப் பதிலையும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.
"விஜய் சேதுபதியுடன் நான் சேர்ந்து தொடர்ந்து படம் இயக்குவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. முதல் படத்தில் மட்டும்தான் நான் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புக் கொடுத்தேன். அடுத்த அடுத்த படங்களை எல்லாம் அவர்தான் என்னைக் கூப்பிட்டுப் போய் எடுக்க வைத்தார். அப்படித்தான் பல படங்களில் இணைந்து பணியாற்றினோம். இப்போது அவர் சினிமா என்ற பெரிய திரையை விட்டு, 'பிக் பாஸ்' மூலம் மற்றொரு களத்திற்குப் போகிறார். இதற்கு முன்னால் அதை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவருக்கு அடுத்து விஜய் சேதுபதி போகிறார். அது அவருக்கு ஒரு வித்தியாசமான களமாக இருக்கும்" என்கிறார்












Click it and Unblock the Notifications