ஓபிஎஸ் MLA பதவியை எடப்பாடி பறிக்காதது ஏன்? 2025க்குள் அதிமுக இணையுமா?
சென்னை: அதிமுகவை விட்டு நீக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் வைத்தியலிங்கம் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறிக்காமல் இருப்பது ஏன் என்பது பற்றி ஒரு கேள்வியை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பி இருக்கிறார்.
தஞ்சாவூர் ஒரத்தநாடு பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் 2025க்குள் அதிமுக ஒன்றிணையும் என்று கூறிய விவகாரம் இப்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. வைத்தியலிங்கம் பேசும் போது, 'நாங்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமியும் இழக்க விரும்பவில்லை. ஆனால், அதிமுக ஒருங்கிணையக் கூடாது என நினைப்பவர்கள் கட்சியிலிருந்து தானாகவே வெளியேறிவிடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். வரும் 2025 டிசம்பருக்குள் அதிமுக ஒன்றிணையும். ஒற்றை தலைமையா? இரட்டைத் தலைமையா? என்பது அப்போது முடிவுக்கு வரும்' என்று கூறியிருந்தார்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் அணியும் சசிகலா அணியும் மட்டும்தான் பேசி வருகின்றன. டிடிவி தினகரன் ஒன்றிணைவது பற்றிப் பேசுவதில்லை. அவர் அதிமுகவை மீட்டு எடுப்போம் என்கிறார். அதாவது தனது கட்சியின் வெற்றியின் மூலம் உண்மையான அதிமுக என்பது அமமுக தான் என நிரூபிப்போம் என்று அவர் சொல்லி வருகிறார். சசிகலா கட்சியை ஒருங்கிணைக்கப் பிரச்சார பயணம் கூட மேற்கொண்டார். ஆனால், இதுவரை அவர் அதிமுக ஒருங்கிணைப்பு பற்றி சொன்ன எந்தத் தகவலும் நிறைவேறவில்லை. அத்தனையும் காற்றில் பறந்துவிட்டன. அதிமுக சட்டரீதியாக எடப்பாடி பழனிசாமி கையில்தான் இருக்கிறது. அதில் உள்ள ஐவர் குழு மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் முன்வைத்த கோரிக்கையை எடப்பாடி நிராகரித்துவிட்டார்.
இந்நிலையில் அதிமுக 2025க்குள் ஒன்றிணையுமா? அதற்கான சாத்தியம் உள்ளதா? என்பது பற்றி மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ஷ்யாம் பேசுகையில், "அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்வாரா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. வைத்தியலிங்கம் 2025 டிசம்பருக்குள் அதிமுக ஒன்றிணையும் என்கிறார். அது மிகப்பெரிய கால அவசாகம்.
வரும் 2024 டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுவிட்டது. அவர்கள் வாக்குப் பெட்டிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொள்வதற்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இது பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய அளவில் நடக்க உள்ள முக்கியமான தேர்தல். அதில் அதிமுக வெற்றி பெறவேண்டும் என்றால் அதற்குள் ஒன்றிணைய வேண்டும். அதிலும் அதிமுக தோல்வியடைந்தால் நிலைமை மோசமாகிவிடும். வைத்தியலிங்கம் 2024க்குள் என்று ஒரு கால வரம்பை நிர்ணயித்து இருந்தால் அது சரியாக இருக்கும்.
இன்று ஒரத்தநாடு பகுதியிலிருந்து இந்தக் குரல் எழுந்துள்ளது. வைத்தியலிங்கத்திற்கு முன்பாக இதே ஒரத்தநாடு பகுதியிலிருந்து அதிமுகவிற்கு ஒரு குரலை எழுப்பியவர் எஸ்டிஎஸ். அவர் ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர். எம்.ஜி.ஆர் காலத்தில் மந்திரியாக இருந்தார். அதிமுக மூத்த தலைவர். எம்.ஜிஆரினால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். 1986இல் இப்போது வரும் உள்ளாட்சித் தேர்தலைப் போல் ஒரு தேர்தலைத் தமிழகம் சந்தித்தது. அதில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக வெற்றிபெறவில்லை.
எனவே மீண்டும் கட்சியை விட்டு வெளியேறிய தலைவர்களை உள்ளே கொண்டுவர வேண்டும் என விரும்பினார் எம்ஜிஆர். உடனே எஸ்டிஎஸ் வீட்டுக்கே எம்ஜிஅர் சென்று அவரை அழைத்து வந்தார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் எம்ஜிஆருக்கு விட்டுக் கொடுக்கும் மனநிலை இருந்தது. அது இல்லை என்றால் ஓபிஎஸ், இபிஎஸ் இணைப்பு சாத்தியம் இல்லை.
அதிமுகவை விட்டுப் பிரிந்துள்ளவர்களை 2 வகையாக பிரிக்கலாம். டிடிவி தினகரன் தனிக்கட்சியாக இருக்கிறார். தனிக் கொடி, தனி சின்னம் என்று என்.டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். ஓபிஎஸ் அப்படி இல்லை. இதில் அதிமுக பொதுக்குழுவினால் நீக்கப்பட்டவர்கள். மற்றொன்று கட்சி நிர்வாகத்தால் நீக்கப்பட்டவர்கள். இதில் பொதுக்குழுவால் நீக்கப்பட்டவர்களை நிர்வாகம் சேர்த்துக் கொள்ள முடியாது. அதைப் பொதுக்குழுதான் முடிவு செய்ய முடியும்.
எடப்பாடி தலைமையில் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக சந்தித்தால் வெற்றி பெறுவது கடினம். ஓபிஎஸுக்கு ஒரு வாக்குவங்கி இருக்கிறது. அதை மறுக்கவே முடியாது. ஓபிஎஸ் இந்த 2024 மக்களவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவரை கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்க முடியும். அதேபோல் வைத்தியலிங்கம் எம்.எல்.ஏ. அவரை கட்சித்தாவல் தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி எடப்பாடி பதவியைப் பறிக்க முடியும். ஆனால், அவர் செய்யவில்லை. அதற்குள் ஒரு காரணம் இருக்கவே செய்கிறது" என்கிறார்.












Click it and Unblock the Notifications