என்.பி.ஆரை எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்கிறார்கள்... காரணம் தெரியுமா?
சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும் என்.பி.ஆரை (NPR) எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் நிலையில் அதை ஏன் எதிர்க்கிறார்கள் என்ற காரணத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட என்.பி.ஆருக்கும், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள என்.பி.ஆருக்கும் உள்ள வித்தியாசங்கள் நிறைய உள்ளதால் தான் இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
அது என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்;

விளக்கம்
தேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும் என்.பி.ஆரில் ஒவ்வொரு குடிமகனும் தன்னை பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். கடந்த 2010-ல் காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், இப்போது மேற்கொள்ளப்பட உள்ள தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. அப்போது 15 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்ட நிலையில் இப்போது 21 கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதுவும் தனி நபர் பற்றிய விவரங்கள். இதைத்தான் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.

மக்கள் விவரம்
காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறீர்கள், என்ன படித்துள்ளீர்கள், வயது, போன்ற பொதுவான கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. ஆனால் இப்போதோ ஆதார் எண், அலைபேசி எண், பிறந்த தேதி, பிறந்த இடம், மூதாதையர் விவரம் என பல தனி நபர் சார்ந்த கேள்விகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக வாக்காளர் பட்டியல் எப்படி பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறதோ, அதைப்போல் இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரமும் பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. அப்படி வைக்கப்படும் போது தனி நபர் சார்ந்த விவரங்கள் தேவையின்றி அடுத்தவருக்கு தெரிய வரும். இப்படி பல நடமுறை சிக்கல்கள் உள்ளன.

மாற்றம்
காங்கிரஸ் ஆட்சியில் என்.பி.ஆர்.கொண்டுவரப்பட்ட போது எழாத சர்ச்சைகளும்,எதிர்ப்புகளும் இன்று எழுந்திருக்கிறது என்றால் அதற்கு அதில் மேற்கொள்ளப்பட்ட மாற்றமே முக்கிய காரணம். மேலும், என்.பி.ஆரை அடிப்படையாக கொண்டே என்.ஆர்.சி.யும் தயாரிக்கப்படும் என்ற சூழல் உள்ளன. அதனால் தான் குடியுரிமை சட்டத்துக்கு இணையாக என்.பி.ஆரையும் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, போன்ற எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள கருத்துக்கு உரிய விளக்கம் தர வேண்டியது எதிர்க்கட்சிகளின் பொறுப்பாகும்.

அரசு விளக்கம்
இதனிடையே தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் தொடர்பில்லை என்றும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெயர் விடுபட்டிருந்தால் அது குடியுரிமையில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், நிர்வாக வசதிக்காக தேசிய மக்கள் தொகை பதிவேடு நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.பி.ஆருக்கும், என்.ஆர்.சிக்கும் மத்திய அரசு கூறுவதை போல் தொடர்பில்லை என வைத்துக்கொண்டாலும், என்.பி.ஆரில் இடம்பெற்றுள்ள கேள்விகள் தான் இதற்கு எதிர்ப்பை உருவாக்குகின்றன.












Click it and Unblock the Notifications