வந்தா வாங்க வராட்டி போங்க! பாஜகவை துணிச்சலாக ஒதுக்கிய எடப்பாடி! காங்கிரசுக்கு அழைப்பு? கவனிச்சீங்களா
இதன் மூலம் கூட்டணியில் நாங்கள் சொல்வதே கொள்கை, நாங்கள் சொல்வதே சட்டம் என்று எடப்பாடி கட்டுப்பாடு போடலாம்.
சென்னை: ஈரோடு கிழக்கில் பாஜகவிற்கு காத்திருக்காமல் கே. எஸ் தென்னரசை எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களின் அதிமுக அணி வேட்பளாரை அறிவித்து உள்ளது. அதோடு புதிய கூட்டணியையும் எடப்பாடி உருவாக்கி உள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலுக்காக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஈரோடு கிழக்கில் சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போட்டியிடுவோம் என்ற எடப்பாடியின் உறுதித்தன்மையை இது காட்டுகிறது.
பாஜக மற்றும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு இன்னும் வேட்பாளரை அறிவிப்பதை பற்றி முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில்தான் எடப்பாடி தரப்பு வேட்பாளரை அறிவித்து, தேர்தல் பணிகளை செய்வதற்காக குழுவை அமைத்து பணிகளை தொடங்கி உள்ளது.
எகிறும் எடப்பாடி.. பாஜகவை கழற்றிவிட்ட அதிமுக? ஈரோடு தேர்தல் பணிமனையில் மோடி படம், பாஜக கொடி மிஸ்ஸிங்
காத்திருக்கவில்லை
இந்த நிலையில் பாஜகவிற்கு காத்திருக்காமல் கே. எஸ் தென்னரசை எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களின் அதிமுக அணி வேட்பாளரை அறிவித்து உள்ளது. பாஜக வந்தால் வரட்டும், வராட்டி போகட்டும். எங்களுக்கு சின்னம் கிடைத்தால் கிடைக்கட்டும். கிடைக்கவில்லை என்றால் போகட்டும். நாங்கள் கண்டிப்பாக போட்டியிடுவோம் என்று சொல்லி எடப்பாடி பழனிசாமி தனது தரப்பு வேட்பாளராக கேஎஸ் தென்னரசை களமிறக்கி இருக்கிறார். பாஜகவிற்கு இவர் காத்திருக்கவில்லை, இரட்டை இலை பற்றியும் கவலைப்படவில்லை.
புதிய கூட்டணி
அதோடு சில காலம் முன் மெகா கூட்டணி அமைப்போம் என்று கூறிய எடப்பாடி பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளார். பாஜகவுடன் மோதினால் சின்னம் காலியாவிடும் என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியை உருவாக்கி உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பதிலாக இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணி புகைப்படத்தில் இதில் பாஜகவை குறிப்பிடும் வகையில் பிரதமர் மோடி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படம் இடம்பெறவில்லை. அதேபோல் பாஜகவை ஆதரிக்கும் ஜான்பாண்டியன் ஏசி சண்முகம் ஆகியோரது படங்களும் இடம்பெறவில்லை.
எடப்பாடி அழைப்பு
இப்போது வைக்கப்பட்டு இருக்கும் கூட்டணிக்கு தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று பெயர் வைத்துள்ளார். அதாவது காங்கிரசின் யூ.பி.ஏவில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள முற்போக்கை எடப்பாடி தனது கையில் எடுத்து உள்ளார். எடப்பாடியின் இந்த நிலைப்பாடு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க இப்படி பெயர் வைத்து இருக்கிறாரா. நாங்கள் முற்போக்கு கொள்கை கொண்டவர்கள் என்பதை எடப்பாடி நிரூபிக்கவும், இனி பாஜகவுடன் தொடர்பு இல்லை என்று காட்டவும் இப்படி செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வாக்கு வங்கி - மக்களுக்கு மெசேஜ்
ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். இதில் 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் தங்கள் பக்கம் வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி இப்போது முற்போக்கு நிலைப்பாட்டை கையில் எடுத்துள்ளாரோ என்றும் என்ன தோன்றுகிறது.
எதிர்கால கூட்டணி
இந்த புதிய கூட்டணி மூலம் எடப்பாடிக்கு இரண்டு புதிய வாய்ப்புகள் உள்ளன. முதல்விஷயம்.. காங்கிரசுடன் கூட்டணி வைக்கலாம். அல்லது பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இணையாமல்.. பாஜகவை தங்களின் என்டிபிஏ கூட்டணிக்கு வர சொல்லலாம். இதன் மூலம் கூட்டணியில் நாங்கள் சொல்வதே கொள்கை, நாங்கள் சொல்வதே சட்டம் என்று எடப்பாடி கட்டுப்பாடு போடலாம். அப்படி செய்தால் அது எடப்பாடிக்கு பெரிய செக்காக இருக்கும். எடப்பாடியின் அடுத்த கட்ட மூவ் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.