ஸ்டாலினின் மெகா திட்டம்.. "ஹை டெக் கிச்சன்".. வரிசையாக வந்த வாகனங்கள்.. "இதை" எதிர்பாக்கவே இல்லையே!
சென்னை: தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு உள்ள பள்ளி காலை உணவு திட்டத்திற்காக புதிய பிளான் ஒன்றை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே முதல்முறையாக கொண்டு வந்து இருக்கும் திட்டம்தான் அரசு பள்ளி மாணவர்களுக்கான "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்". பிற மாநிலங்கள் மதிய உணவு திட்டத்திலேயே இன்னும் முழுமை பெறாத நிலையில்தான் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறது.
கடந்த மே மாதம் 7ம் தேதி இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். இதையடுத்து இன்று மதுரை நெல்பேட்டையில் இந்த திட்டம் துவங்கி வைக்கப்பட்டது.

ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் பள்ளியில் திட்டத்தை துவங்கி வைத்து மாணவர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்டார். மாணவர்களுக்கு காலை உணவை ஊட்டி விட்டு அவர்களிடம் உணவு எப்படி இருக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டார். சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் மூலம் நேரடியாக ஒரு லட்சத்து 14,095 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

காலை
மொத்தம் ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. காலை 7.45 மணிக்குள் சமையல் பணிகள் முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இந்த உத்தரவில் கூறி உள்ளது. முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஹை டெக் கிச்சன்
இந்த உணவு திட்டத்திற்காக ஹை டெக் கிச்சன் மதுரையில் களமிறக்கப்பட்டு உள்ளது. அதாவது நடமாடும் கிட்சன் இதற்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த கிட்சன் உள்ளேயே சமைக்கும் வசதிகள் இருக்கும். இதில் கைகளை வைத்து சமைக்காமல் முழுக்க முழுக்க எந்திரங்கள் மூலம் சமைக்கும் வசதிகள் உள்ளன. முக்கியமாக மாவு பிசைவது தொடங்கி பல்வேறு உணவு தயாரிப்பு முறைகள் எந்திரங்கள் மூலமே செய்யப்படும். இந்த வாகனங்கள் மதுரை முழுக்க களமிறக்கப்பட்டு உள்ளது.

எளிதாக செய்யலாம்
இந்த வாகனங்கள் மூலம் காலை உணவுகளை எளிதாக சமைக்க முடியும். இதே போன்ற வாகனங்கள் மற்ற மாநகராட்சிகளிலும் களமிறக்கப்பட உள்ளது. மதுரையில் மட்டும் கிட்டத்தட்ட 15 வாகனங்கள் இதற்காக கொண்டுவரப்பட்டது. சில பள்ளிகளில் காலை உணவை சமைக்க இன்னும் வசதி ஏற்படுத்தப்படவில்லை என்றால் அதற்கு பதிலாக இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும். இந்த வாகனங்கள் நவீன வசதிகளுடன் இருப்பதால் காலை 7 மணிக்கு முன்பாகவே உணவுகளை சமைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications