எத்தனை சீட்? யாருக்கு சக்சஸ்? முட்டி மோதும் ஓபிஎஸ், எடப்பாடி.. மோடியின் கடைக்கண் பார்வை யார் பக்கம்?
சென்னை : பிரதமர் மோடியைச் சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போதெல்லாம் தனியாகச் சந்தித்து பேச ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே பெரும் போட்டியே நிலவுவது இந்த முறையும் தொடர்கிறது. இந்தச் சந்திப்பின்போது ஒரு முக்கிய விஷயம் குறித்து பேச திட்டமாம்.
பிரதமர் மோடி தமிழ்நாடு வருகையின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 8-ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தனித்தனியே சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.

நாளை மறுநாள் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே சந்திக்க உள்ளனர். அதுவும் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க உள்ளார். மறுபக்கம் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக விவகாரத்தில் தொடர் பின்னடைவைச் சந்தித்து வரும் சூழலில் பிரதமரை சந்திக்க உள்ளார்.
மோடி வரும்போதெல்லாம் : அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல் ஏற்பட்ட பிறகு பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவருமே தனித்தனியாகச் சந்திக்க நேரம் கேட்பது வழக்கமாகிவிட்டது. ஏற்கனவே சென்னை வந்தபோது வரவேற்க எடப்பாடி பழனிசாமியும், வழியனுப்ப ஓ.பன்னீர்செல்வமும் சென்றனர்.
அதேபோல, பிரதமர் மோடி காந்திகிராம பல்கலைக்கழக விழாவில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று பின்னர் வழியனுப்பி வைத்தனர். யாருடனும் தனியாக பிரதமர் மோடி சந்தித்துப் பேசவில்லை.

ஒரே லெவலில் : இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டுக்கு 2 நாள் பயணமாக வருகை தரும் பிரதமர் மோடி ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரையும் தனித்தனியாக சந்திப்பாரா, அல்லது தனிப்பட்ட சந்திப்புகளைத் தவிர்ப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள பன்னீர்செல்வத்தையும், அதிமுக பொதுச் செயலாளராகியுள்ள பழனிசாமியையும் இப்போதும் பிரதமர் மோடி ஒன்றுபோலவே மதிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாஜக தலைமையை பெரிதும் நம்பிய ஓபிஎஸ் நிலை தற்போது அரசியல் ரீதியாக மோசமாகியுள்ளதால், பிரதமர் உடனான இந்தச் சந்திப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு திருப்பம் தருமா என்பது ஓபிஎஸ் அணியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேசமயம் ஈபிஎஸ் தரப்பினர், எடப்பாடி பழனிசாமியையே அதிமுகவின் முகமாக மோடி அங்கீகரிப்பார் என எதிர்பார்க்கின்றனர்.
கர்நாடகா தேர்தல் கணக்கு : இதுதவிர, கர்நாடகா தேர்தல் விவகாரம் தொடர்பாகவும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பிரதமர் மோடியிடம் பேசவுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பினருமே விரும்புகின்றனர். இதற்கான வேலைகளிலும் இரண்டு கோஷ்டிகளும் ஈடுபட்டு வருகின்றன.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடனான கூட்டணி தொடரும் என உறுதியளித்து, பிரதமரிடம் சீட் கேட்பார் ஈபிஎஸ் என்கிறார்கள்.

யாருக்கு அனுகூலம்? : அதேபோல, ஓ.பன்னீர்செல்வம் கர்நாடகாவில் தங்கள் அணியே பலமாக இருக்கிறது, கர்நாடகா மாநில அதிமுக செயலாளராக இருந்த புகழேந்தி எங்கள் பக்கம் தான் இருக்கிறார், அங்கு அதிமுக கட்டமைப்பு பலமாக உள்ளது, எங்கள் பக்கம் தன செல்வாக்கான தலைவர்கள் உள்ளனர் என பிரதமரிடம் தெரிவித்து சீட்டை உறுதி செய்யப்போகிறார் என்கிறார்கள். இரு தரப்புக்கும் சீட்கள் பிரித்து வழங்கப்படலாம் என்ற பேச்சும் இருக்கிறது.
எது எப்படியோ, பிரதமர் மோடியின் வருகை இந்த முறையும் அதிமுகவினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா தேர்தல் திட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் முயற்சிகளுக்கு பலன் கிடைக்குமா? பிரதமர் மோடியின் கடைக்கண் பார்வை யார் பக்கம் திரும்பும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications