"நேரம் முடிய போகிறது".. அசைந்து கொடுக்காத அரசு! ஜெ. ஸ்டைலை கையில் எடுத்த ஸ்டாலின்? தகிக்கும் காவி
சென்னை: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு இதில் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
தமிழ்நாட்டில் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உள்ளது. இந்திய சுதந்திர தின 75ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் அந்த அமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டது.
பிஎஃப்ஐ தடை மட்டும் போதாது.. ஆர்எஸ்எஸ்-க்கு தடை விதிக்க வேண்டும்.. காங். எம்பி கொடிக்குனில் சுரேஷ்!
அனுமதி இல்லை
அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரை சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஊர்வலம் நடத்த கோர்ட் அனுமதி அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது. வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட கூடாது. போக்குவரத்துக்கு தடை ஏற்படும் வகையில், மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட கூடாது.
ஆர்எஸ்எஸ் தடை
ஊர்வலத்தில் சாதி, மதம், தனி நபர் குறித்து தவறுதலாக பேச கூடாது. மோதல்களை தூண்டும் வகையில் செயல்பட கூடாது. கம்பு, லத்தி, ஆயுதம் ஆகிவற்றை கொண்டு செல்ல கூடாது. மக்களை காயப்படுத்தும் நடவடிக்கை எதுவும் செய்ய கூடாது. நீதிமன்ற விதிகளில் ஒன்றை மீறினாலும் போலீசார் சுதந்திரமான நடவடிக்கையை எடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்து உள்ளது. அதோடு செப்டம்பர் 28ம் தேதிக்குள் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அனுமதி இல்லையா?
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு இதில் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இன்றோடு காலக்கெடு முடியும் நிலையில் இதுவரை கோர்ட் அனுமதி கொடுக்கவில்லை, சட்ட ஒழுங்கை காரணம் காட்டி பேரணிக்கு அனுமதி வழங்கப்படாது என்று தெரிகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
பெட்ரோல் குண்டு
பாஜக அலுவலகம், பாஜகவினருக்கு சொந்தமான இடங்கள் பலவற்றில் நேற்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கோவை சித்தாபுதூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. இந்த பெட்ரோல் குண்டை வீசியது யார் என்று விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பதற்றம்
இதை சுட்டிக்காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி கொடுக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. இதற்கு முன் ஜெயலலிதா ஆட்சியில் ஒரு முறை ஆர்எஸ்எஸ் பேரணிக்கு கோர்ட் அனுமதி கொடுத்தும் ஜெயலலிதா அதை அனுமதிக்கவில்லை. அதேபோல்தான் முதல்வர் ஸ்டாலினும் இந்த முறை அனுமதி கொடுக்காமல் தடை செய்ய இருக்கிறாரோ என்று கேள்வி எழுந்துள்ளது . தற்போது நிலவும் சட்ட ஒழுங்கை காரணம் காட்டி பேரணிக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
போலீஸ் வாதம்
முன்னதாக இந்த வழக்கில் தமிழ்நாடு போலீஸ் வைத்த வாதத்தில், எந்த பாதையில் செல்கிறார்கள் என தகவல்கள் அளிக்கவில்லை. ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது .காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை. அவர்கள் செல்லும் வழியை குறிப்பிட வேண்டும். ஆனால் அவர்கள் குறிப்பிடாத காரணத்தால் அனுமதி வழங்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இவை தொடர்பான எந்த உறுதியையும், மனுதாரர்கள் தரப்பில் காவல்துறையிடம் தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஊர்வலம் செல்லும் வழியில் மதம் சார்ந்த பதற்றமான பகுதிகள் இருக்கலாம் என்பதால், அவர்கள் செல்லும் வழியை துல்லியமாக தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது.