எந்த மாநிலத்திலும்.. பழுதான இ.வி.எம் மெஷினில்.. தாமரைக்கே ஓட்டு விழுவது ஏன்?.. ஜோதிமணி நச் கேள்வி!
சென்னை: எல்லா மாநிலங்களிலும் கோளாறான வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் ஏன் தாமரைக்கே பதிவாகிறது? என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
விருதுநகர் சத்ரிய பள்ளி வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் வாக்குப் பதிவாகுவதாக நேற்று புகார் எழுந்தது குறிப்படத்தக்கது.
வாக்குப்பதிவு எந்திரம் சர்ச்சை
தமிழகம் முழுவதும் நேற்று வெற்றிகரமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் சிறு, சிறு சம்பவங்கள் ஏற்பட்டாலும், தமிழகம் முழுவதும் தேர்தல் அமைதியாகவே நடந்தது. ஆனால் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது அடைந்ததால் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர். சில பகுதிகளில் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவின் சின்னமான தாமரைக்கு ஒட்டு பதிவாவதாக புகார்கள் வந்தன.
தாமரைக்கே ஓட்டு பதிவானது
குறிப்பாக விருதுநகர் சத்ரிய பள்ளி வாக்குச்சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் வாக்குப் பதிவாகுவதாக புகார் எழுந்தது. இதனால் வாக்கு எந்திரத்தில் குளறுபடி நடந்துள்ளதாக வாக்காளர்கள் குற்றஞ்சாட்டினர். உடனடியாக, வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வாக்கு இயந்திரத்தை பரிசோதிக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஜோதிமணி கேள்வி
சென்னை வேளச்சேரியில் வாக்குப்பதிவு எந்திரங்களை ஸ்கூட்டரில் கொண்டு செல்லப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.இந்த நிலையில் எல்லா மாநிலங்களிலும் கோளாறான வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் ஏன் தாமரைக்கே பதிவாகிறது? என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
சொல்லி வைத்த மாதிரி ஏன் நடக்கிறது?
இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் ஜோதிமணி கூறியிருப்பதாவது:- நேற்று விருதுநகரில் ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.இது இயற்கையானதாகக் கூட இருக்கலாம். ஆனால், அதெப்படி ஒவ்வொரு முறையும், எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்தியரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது? ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை?' என்று ஜோதிமணி கேள்வி எழுப்பி உள்ளார்.