அருகே வந்த ஆளுநர்.. சட்டென சிரித்த முதல்வர்.. இன்றே டெல்லி "பறக்கும்" ஸ்டாலின்.. 3 மெகா பிளான்கள்!
சென்னை: நேற்று ஆளுநர் ஆர். என் ரவியின் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் டெல்லி கிளம்ப இருக்கிறார்.அவரின் இந்த டெல்லி பயணத்திற்கு பின் 3 முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று ஆளுநர் ஆர். என் ரவி தனது இல்லத்தில் தேநீர் விருந்து கொடுத்தார். குடியரசுத் தினத்தின் போது தேநீர் விருந்தை புறக்கணித்த ஆளும் திமுக நேற்று நடந்த விருந்தில் கலந்து கொண்டது.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மெய்யநாதன், அனிதா ராதா கிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அரசியல் வட்டாரத்தில் இந்த சம்பவம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநர் தேநீர் விருந்து! ஆதரவாளர்களுடன் ஆஜரான ஓபிஎஸ்.. மிஸ்ஸான எடப்பாடி! உற்று நோக்கும் அதிமுக தலைகள்
குழப்பம்
நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகை சென்ற போது அவரை வாசலுக்கே சென்று சிரித்தபடி ஆளுநர் ஆர். என் ரவி வரவேற்றார். ஆளுநர் சிரித்தபடி வந்ததை பார்த்ததும் முதல்வரும் நேற்றுசிரித்தார் . இவர்கள் நேற்று கொஞ்சம் நெருக்கமாக காணப்பட்டனர். இரண்டு தரப்பிற்கும் இடையில் பல்வேறு கருத்து மோதல்கள் இருந்தாலும் இருவரும் நெருக்கமாக காணப்பட்டனர். நேற்றைய நிகழ்விற்கு எடப்பாடி, அண்ணாமலை வராதபோது ஸ்டாலின் மட்டும் ஆளுநருடன் நெருக்கமாக இருந்தது பல்வேறு யுகங்களுக்கு வழி வகுத்துள்ளது.
அப்பாயிண்ட்மெண்ட்
இந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் என்று டெல்லி செல்கிறார். இந்த பயணத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் ஆகியோரை சந்திக்கிறார். இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரையும், 11.30 மணிக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்முவையும் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பிற்கு பின் அன்று மாலையே பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார். இதற்கும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கப்பட்டுள்ளது.
என்ன பிளான்?
மொத்தம் 3 விவகாரங்கள் தொடர்பாக இதில் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என்று கூறப்படுகிறது. விவகாரம் 1 - புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். இதனால் நம்பிக்கையில் இருக்கும் திமுக அரசு, நீட் விலக்கு சட்டத்திற்கும் இதேபோல் அனுமதி பெறலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது. குடியரசுத் தலைவருடன் நடக்கும் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் இதை பற்றித்தான் முதலில் பேசுவார் என்று கூறப்படுகிறது.
விவகாரம் 2
நீட் பற்றி பேசுவது போக இரண்டாவதாக இன்னொரு விஷயமும் உள்ளது. அதாவது ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் மசோதாக்களை உடனே டெல்லிக்கு அனுப்பி வைக்கும்படி குடியரசுத் தலைவர் அழுத்தம் தர வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். இது தொடர்பாகவே முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர், பிரதமர் இருவரிடமும் பேசுவார் என்று கூறப்படுகிறது, இந்த இரண்டு விஷயங்கள்தான் இந்த பயணத்தில் முக்கியத்துவம் பெறும் என்கிறார்கள்.
வேறு என்ன?
இது போக மூன்றாவதாக காவிரி விவகாரம் தொடர்பாக உள்ள வழக்குகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது. டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் சட்ட வல்லுனர்களை சந்திக்க உள்ளார். தமிழ்நாடு இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. இந்த சந்திப்பில்தான் முதல்வர் ஸ்டாலின் காவிரி விவகாரம் குறித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. மற்றபடி இந்த பயணத்தில் முதல்வர் ஸ்டாலின் மத்திய அமைச்சர்களை சந்திக்க வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.