டெல்லியில் 3 காரை மாற்றினாரே எடப்பாடி.. அதுக்கு காரணம் தெரியாதா என்ன! திடீரென ஆவேசமான சேகர்பாபு
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியின் இந்த பயணம் தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், இப்போதே தேர்தலை மையமாக வைத்து காய்களை அரசியல் கட்சிகள் நகர்த்தத் தொடங்கிவிட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த எடப்பாடி பழனிசாமி- அமித் ஷா சந்திப்பும் அதன் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவும் சுமார் 15 நிமிடங்கள் தனியாகப் பேசியதாகக் கூறப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
இரு மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு குறித்து அமித் ஷாவிடம் கோரிக்கை விடுத்ததாக எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். இருப்பினும், இந்தச் சந்திப்பில் நிச்சயம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இருந்திருக்கும் என்றே அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதற்கிடையே அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இது தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சேகர்பாபு கேள்வி
அதில் அவர், "அவர் டெல்லியில் இருக்கும்போது ஒரு மாதிரி பேசுகிறார். சென்னை திரும்பியவுடன் ஒரு மாதிரி பேசுகிறார். 3 கார்கள் மாறி மாறி செல்கிறார். கூட்டணி குறித்து பாஜக தலைவர்கள் சொல்வதும் வேறு ஒரு மாதிரி இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை நினைத்த நேரத்தில் உள்துறை அமைச்சரைச் சந்திக்க முடிந்தவர்கள் தமிழகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டும். தமிழக முதல்வரும் இதைத்தான் சட்டசபையில் எடுத்துச் சொல்லி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி தனது செல்வாக்கைத் தமிழக மக்களின் உயர்வுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.
தோல்வி தான் கிடைக்கும்
அவரது கட்சியைத் தக்கவைக்கவும் பாதுகாக்கவும் செல்வாக்கைப் பயன்படுத்துவதைத் தமிழக மக்கள் உற்று நோக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்கான விடையைத் தமிழக மக்கள் 2026 தோல்வி என்பதன் மூலம் பரிசாக அளிப்பார்கள். ரமலான் பண்டிகையை முன்னிட்டு திமுக சார்பில் பல்வேறு இடங்களில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளும் நலத்திட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே துறைமுகம் பகுதியில் இன்று நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது" என்றார்.
டெல்லி பயணம்
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் என்பது பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஏனென்றால் தமிழகத்தில் இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அப்படியிருக்கும்போது அவர் திடீரென டெல்லி செல்வார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்போதும் கூட முதலில் டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தைத் திறந்து வைக்கவே எடப்பாடி பழனிசாமி அங்குச் சென்றதாகக் கூறப்பட்டது. செய்தியாளர்கள் கேட்ட போது எடப்பாடியே அப்படி தான் சொன்னார்.
3 கார்கள்
ஆனால், அவர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாகக் கூறப்பட்டது. அதற்கேற்ப பயணத் திட்டம் குறித்த விவரங்கள் வெளிவராமல் இருக்க எடப்பாடி அரசு வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, தனியார் வாகனங்களையே பயன்படுத்தினார். அமித் ஷா சந்திப்பின் போது மொத்தம் 3 கார்களில் மாறி மாறி சென்றதாகக் கூறப்பட்டது. மேலும் இந்த சந்திப்புக்குப் பிறகு, 2026ல் தமிழகத்தில் என்டிஏ அரசு ஆட்சியை அமைக்கும் என்றும் அமித் ஷா ட்வீட் போட்டதே கூட்டணி பேச்சுவார்த்தையை உறுதி செய்யும் விதமாக இருந்தது.












Click it and Unblock the Notifications