எடப்பாடியை அமித்ஷா சந்திக்க விரும்பினார்.. மீட்டிங் இதனால்தான் நடக்கல.. அண்ணாமலை வெளியிட்ட சீக்ரெட்!
சென்னை: அண்மையில் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபோது, எடப்பாடி பழனிசாமி அவரைச் சந்திக்காதது ஏன் என்பது பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி வேலூரில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். முன்னதாக, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

வேலூரில் நடைபெற்ற பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பங்கேற்றார். அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் வேறு யாரும் பங்கேற்கவில்லை. அதற்கு முந்தைய நாள் அமித் ஷா 24 பிரபலங்களை சந்தித்தபோதில் அவர்களில் சிலர் அரசியல் பிரமுகர்களும் இடம்பெற்றிருந்தனர்.
அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்தபோது, நாடாளுமன்ற தேர்தல், பாஜக போட்டியிடும் தொகுதிகளை முன்கூட்டியே இறுதி செய்வது குறித்து பேசப்பட உள்ளதாகவும் தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டதாகவும், அமித் ஷா அதற்கு ஓகே சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகின, ஆனால், எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வமும் அமித் ஷாவை சந்திக்கவில்லை.
இதையொட்டி பல்வேறு யூகங்கள் கிளம்பின. அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், பாஜக, சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிக இடங்களில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், அண்ணாமலை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "அமித் ஷா என்னிடம், எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டும் என்று என்னைக் கேட்டார். நான் எடப்பாடி பழனிசாமி அண்ணனுக்கு போன் செய்தேன். எடப்பாடி பழனிசாமி காலில் ஒரு பிரச்சனை இருந்ததால் அவர் சேலத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். அதனால், அவரால் இங்கு வர முடியவில்லை. வேறு எந்தக் காரணமும் இல்லை" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications