செங்கோட்டையனை எடப்பாடி நீக்கியதற்கு இதுதான் காரணம்.. உடைத்து பேசிய தராசு ஷ்யாம்
சென்னை: அதிமுக மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தார் என்பது குறித்து அரசியல் விமர்சகர் தராசு ஷ்யாம் விளக்கியுள்ளார்.
அதிமுகவில் கடந்த சில காலமாகவே எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதற்கிடையே நேற்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை செங்கோட்டையன் சந்தித்துப் பேசியது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தார் என்பது குறித்து அரசியல் விமர்சகர் தராசு ஷ்யாம் விளக்கியுள்ளார். இப்போது செங்கோட்டையனை நீக்காமல் விட்டால் அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையாகும் என்று தராசு ஷ்யாம் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக சன் நியூஸுக்கு அவர் அளித்த பேட்டியில்,"இது எதிர்பார்த்த விஷயம்தான். நேற்று மூவரும் (டிடிவி- ஓபிஎஸ்- செங்கோட்டையன்) சந்தித்துப் பேசியதாலேயே உடனடியாகக் கட்சி இவர்கள் பின்னால் போகாது.. அது கண்டிப்பாக எடப்பாடி பின்னால் தான் இருக்கும்.. காரணம் இரட்டை சின்னம், பாரதிய ஜனதா கூட்டணி! அதைத் தவிர்த்து பார்த்தால்.. எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வழி இல்லை.
ஏனென்றால் அதிமுகவுக்கு எதிராகவே வழக்கு தொடர்ந்திருப்பவர் ஓபிஎஸ்! அவர் ஒரு மனுதாரர்.. இதை இப்படியே விட்டுவிட்டால்.. நாளை வழக்கு விசாரணையில் ஓபிஎஸ் உடன் அனைவரும் இணக்கமாகவே இருக்கிறார்கள் என சொல்லி இந்த செங்கோட்டையன் நிகழ்ச்சியைச் சொல்வார்கள். எனவே, ஓபிஎஸ் அதிமுகவில் தான் இருக்கிறார் என கூட வழக்கறிஞர்கள் சொல்லலாம். எனவே செங்கோட்டையனை நீக்கினால் தான் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் நீக்கியிருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமியால் சொல்ல முடியும்.
அதிமுக அமைப்பு விதிகளின்படி முதலில் ஒரு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அந்த நோட்டீஸ் கொடுத்தார்களா இல்லையா என்று தெரியவில்லை.. எனவே என்னை நீக்கியது செல்லாது.. கட்சி விதிகளின்படி என்னை நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமில்லை என சொல்லிக் கண்டிப்பாக செங்கோட்டையன் வழக்கு போடுவார். தான் அமைப்புச் செயலாளர் என்பதால் பொதுக்குழு தான் நீக்க முடியும் என செங்கோட்டையன் கூறலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications