வேலூரில் எலக்ட்ரிக் பேட்டரி வெடித்து தந்தை- மகள் பலி.. விபத்துக்கு என்ன காரணம்? மக்களே உஷார்!
சென்னை: வேலூரில் மின் வாகனத்தின் பேட்டரிக்கு சார்ஜ் போட்ட போது அது வெடித்ததால் தந்தையும் மகளும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருக்கும் நிலையில் பெரும்பாலானோர் அரசு பேருந்துகளை நாடத் தொடங்கிவிட்டனர். இன்னும் சிலர் சைக்கிளில் சென்றுவருவதை வாடிக்கையாக்கிவிட்டனர்.
இந்த நிலையில்தான் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகமாகியுள்ளன. இந்த பைக்குகள் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு இயங்கும் என்பதால் இதற்கு பெட்ரோல் தேவையில்லை. மேலும் பேட்டரியை சார்ஜ் செய்ய அரசு சார்பில் சார்ஜிங் ஸ்டேஷன்களும் அமைக்கப்படுகிறது.

எலக்ட்ரிக் பைக்குகள்
இந்த எலக்ட்ரிக் பைக்குகளால் காற்றும் மாசடையாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பைக் என்பதால் இதை நிறைய பேர் வாங்குகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் சின்ன அல்லாபுரத்தை சேர்ந்த துரைவர்மா (49) என்பவர் வாங்கியுள்ளது. வேலூர் சின்ன அல்லாபுரம் டோல்கேட் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.

தாய் இறப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி இறந்துவிட்டார். இவர்களுக்கு மோகன ப்ரீத்தி (13) என்ற மகளும் அவினாஷ் (10) என்ற மகளும் இருந்தனர். இவர்களில் மோகன ப்ரீத்தி போளூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது தந்தை வீட்டிற்கு ப்ரீத்தி வந்துள்ளார்.

இரு பைக்குகள்
துரைவர்மா எலக்ட்ரானிக் பைக்கையும் பெட்ரோல் மூலம் இயங்கும் பைக்கையும் வாங்கி வைத்திருந்தார். எலக்ட்ரானிக் பைக் பேட்டரிக்கு இரவு நேரங்களில் சார்ஜ் ஏற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவரது வீடு மிகவும் குறுகிய அறைகளை கொண்டது. வீட்டில் ஜன்னல்களும் இல்லை. அவினாஷ் மட்டும் அவருடைய அத்தை வீட்டுக்கு சென்றிருந்தார்.

பேட்டரி வெடித்தது
இந்த நிலையில் எலக்ட்ரிக் பைக்கில் சார்ஜ் ஏறி கொண்டிருந்த போது பேட்டரி வெடித்து சிதறியது. இந்த புகைமூட்டத்தால் வீட்டிற்குள் படுத்திருந்த தந்தையும் மகளும் வெளியே வரமுடியாத நிலையில் கழிவறைக்குள் சென்றனர். அங்கு மூச்சுத்திணறி அமர்ந்த நிலையில் இறந்துவிட்டனர்.

அதிர்ச்சியான சம்பவம்
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மின் வாகன பேட்டரி தீப்பிடிக்க காரணங்கள் என்பது குறித்து நிபுணர்கள் கூறுகையில், வேலூர் சம்பவத்தில் போலீஸாரின் விசாரணைக்கு பிறகே பைக் ஏன் எரிந்தது என்பது தெரியவரும். ஆனால் பொதுவாக உற்பத்தி கோளாறும் இருந்திருக்க வாய்ப்புள்ளது.

என்ன காரணம்
மேலும் ஏற்கெனவே ஒரு பைக் நிறைய நேரம் வெயிலில் நின்றிருக்கும். அந்த நேரத்தில் சார்ஜ் போடும் போது அதி சூடாகி அது வெடித்து சிதற வாய்ப்புள்ளது. மேலும் ஒரு எலக்ட்ரிக் பைக் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் போது அதில் கொடுக்கப்படும் கையேடுகளை படித்தாலே இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications