தகாத வார்த்தைகளால் விமர்சனம்- 8 ஆண்டுகளுக்கு முந்தைய ரணகளம்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் Vs விஜயதாரணி மோதல்!
8 ஆண்டுகளாக யுத்தம் போல நீடிக்கிறது ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயதாரணி இடையேயான மோதல்.
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கும் மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு மேலாக ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயதாரணி இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
2015-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அப்போது தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் விஜயதாரணி எம்.எல்.ஏ. அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகம், சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோஷ்டி பெண்களுக்கும் விஜயதாரணி கட்டுப்பாட்டில் இருந்த மகளிர் அணி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இந்த மோதல் தொடர்பாக ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் விஜயதாரணி நேரிடையாக மோதினார். இந்த மோதலின் போது ஈவிகேஎஸ் இளங்கோவன், தம்மை தகாத வார்த்தைகளால் அசிங்கமாக விமர்சித்தார் என்பது விஜயதாரணியின் புகாராக இருந்தது. மேலும் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே போய்விடுமாறு தம்மை இளங்கோவன் மிரட்டினார் என்பதும் விஜயதாரணியின் குற்றச்சாட்டாக இருந்தது. 2015-ம் ஆண்டு இருவருக்கும் இடையேயான இந்த மோதல் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது.
ஒரு கட்டத்தில் விஜயதாரணியின் ஆதரவாளர்களை ஈவிகேஎஸ் இளங்கோவன் நீக்குவதும் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவாளர்களை விஜயதாரணி நீக்குவதுமாக மோதல் வெடித்தது. இந்த மோதலைத் தொடர்ந்து டெல்லி மேலிடம் தலையிட்டு இருதரப்பையும் சமாதானப்படுத்தியது. ஆனாலும் அக்கப்போர் ஓயாத நிலையில் விஜயதாரணி வசம் இருந்த தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் விஜயதாரணி கோபத்தின் உச்சிக்கு சென்றார். அப்போதுதான் விஜயதாரணிக்கும் அதிமுகவின் ஜெயா டிவிக்கும் இடையே மோதல் ஒன்றும் நடைபெற்று வந்தது. முதல்வராக இருந்த ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸும் அனுப்பி இருந்தார் விஜயதாரணி.

அந்த பரபர்ப்பான நிலையில் தமிழ்நாடு சட்டசபை வளாகத்தில் ஜெயலலிதாவையும் விஜயதாரணி நேரில் சந்திக்க செய்திகள் ரெக்கை கட்டி பறந்தன. தமிழ்நாடு காங்கிரஸ்(ஜெ) அணி உருவாகிறது? அதிமுகவில் இணைகிறார் விஜயதாரணி. அதிமுகவில் கொள்கை பரப்பு செயலாளராகிறார் விஜயதாரணி என்றெல்லாம் கூட செய்திகள் பரவின. பின்னர் இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்தது.
தற்போது 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயதாரணி எம்.எல்.ஏ. இடையே மோதல் வெடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மூலம் மீண்டும் எம்.எல்.ஏ.வானார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவர் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற நிகழ்ச்சியில் விஜயதாரணி பங்கேற்கவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட போது, அவருக்கு தனியா அழைப்பு தரணுமா? என்ற தொனியில் கடுகடுத்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications