விஜிலென்ஸ் ரெய்டு வருவதற்குள் அதிமுக அவைத் தலைவர் பதவி கிடைக்கனுமே... ரொம்பவே போராடிய எஸ்.பி.வேலுமணி
சென்னை: திமுக அரசின் டார்கெட் பட்டியலில் முதலில் இருக்கிறோம்; எப்படியும் ரெய்டு, கைது நடவடிக்கைகள் தம் மீது எந்த நேரத்திலும் பாய்ந்துவிடும். இந்த வேகத்தை சற்று குறைத்து அரசியல் பழிவாங்கல் என திசைதிருப்ப அதிமுக அவைத் தலைவர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என முனைப்பு காட்டிய எஸ்.பி.வேலுமணிக்கு கிடைத்திருப்பது என்னவோ ஏமாற்றம்தான்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிகமான ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணிதான். அமைச்சராக இருக்கிறோம் என்கிற கோதாவில் தமது ஊழல் சாம்ராஜ்ஜியத்தை அங்கிங்கெனாதபடி விரிவாக்கம் செய்தார் எஸ்.பி.வேலுமணி. சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் எஸ்.பி.வேலுமணி செய்த ஊழல் முறைகேடுகளுக்கான ஆதாரங்களுடன் நீதிமன்றம் போனார்கள் திமுகவின் ஆர்.எஸ். பாரதியும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமனும்.
ஆனால் தம் மீது அவதூறு பரப்புகிறது அறப்போர் இயக்கம் என ஒரு வழக்குப் போட்டார் எஸ்.பி.வேலுமணி. இந்த வழக்கை விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அங்கேயே எஸ்.பி.வேலுமணிக்கு சறுக்கல் தொடங்கிவிட்டது. சில வாரங்களுக்கு முன்னர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணையில் விரைவில் நடவடிக்கை எடுப்போம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. அதே காலகட்டத்தில்தான் அதிமுக அவைத்தலைவராக இருந்த மதுசூதன், உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அதிமுக அவைத் தலைவர் பதவி
இதனால் அதிமுகவின் தற்காலிக அல்லது புதிய அவைத் தலைவர் ஒருவர் நியமிக்கப்படலாம் என்கிற பேச்சுகள் எழுந்தன. எது எதுவெல்லாம் தமக்கு சாதகமோ அத்தனையும் பயன்படுத்தக் கூடியவர் வேலுமணி. அதிமுக அவைத் தலைவர் பதவியை மட்டும் விட்டு வைப்பாரா என்ன? அதிமுக அவைத் தலைவர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் படுதீவிரம் காட்டினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எந்த தடையும் சொல்லப் போவதும் இல்லை என்பதும் நாடறிந்ததுதான். அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு எஸ்.பி.வேலுமணி குறிவைத்ததும் காரணத்தோடுதான் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

வேலுமணியின் திட்டம் என்ன?
அதிமுகவின் அவைத் தலைவர் பதவி மிக முக்கியமானது; அதிமுகவின் பொதுக்குழு, ஆட்சிமன்றக் குழு உள்ளிட்டவற்றை கூட்டும் அதிகாரங்களைக் கொண்டது. அப்படியான ஒரு பதவியில் அமர்ந்துவிட்டால் திமுக அரசு தம் மீது உடனே எந்த ஒருநடவடிக்கையையும் தொடங்குவதற்கும் சற்று தயக்கம் காட்டும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தாலும் திமுக அரசின் வேகம் கொஞ்சம் குறையக் கூடும். அதற்குள் தாமும் தப்புவதற்கு இன்னமும் இருக்கிற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தலாம் என்பதுதான் வேலுமணியின் கணக்கு. அப்படியே அதிமுக அவைத் தலைவர் பதவியில் இருக்கின்ற போது தம் மீது நடவடிக்கை பாய்ந்தால் நிச்சயம் ஒட்டுமொத்த அதிமுகவும் தமக்கு பின்னால் வரும்; அரசியல் பழிவாங்கல் என அழகாக திசை திருப்பிவிடலாம் என்பதும் வேலுமணியின் திட்டம்.

முட்டுக்கட்டை போட்ட ஓபிஎஸ்
ஆனால் அவ்வளவு எளிதாக அவைத் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டுப் போக ஓபிஎஸ் தரப்பு தயாராக இல்லை. அதுவும் எஸ்.பி.வேலுமணி, அவைத் தலைவர் பதவி கேட்கிறார் என்றால் சும்மா இருந்துவிடுவாரா ஓபிஎஸ். ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றியதில் சூத்திரதாரியாக செயல்பட்டவர் எஸ்.பி.வேலுமணி. அதிக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்- அதனால் எடப்பாடி பழனிசாமிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி தர வேண்டும் என பேசி ஓபிஎஸ்-க்கு அவமானத்தை தந்தவர் எஸ்.பி.வேலுமணி. அதனால்தான் ஓபிஎஸ் தரப்பு அதிமுக அவைத் தலைவர் பதவியை சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா, தமிழ் மகன் உசேன் ஆகியோரில் ஒருவருக்கு தரவேண்டும் என செக் வைத்தது. இதனால் எஸ்.பி.வேலுமணி நினைத்தபடி அதிமுக அவைத் தலைவர் பதவி கிடைக்காது என்பதும் உறுதியாகிவிட்ட்டது.

வேலுமணி மீது பாய்ந்த நடவடிக்கை
வேலுமணி நினைத்தது போலவே இப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தமது ஆட்டத்தை தொடங்கிவிட்டது. தமிழகம் முழுவதும் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய மொத்தம் 53 இடங்களில் மெகா ரெய்டு; முக்கிய ஆவணங்கள் அடுத்தடுத்து சிக்குகின்றன; எஸ்.பி.வேலுமணியிடம் துருவித் துருவி விசாரணை என செய்திகள் குவிந்து கொண்டே இருக்கின்றன. டெண்டர் முறைகேடு என்பது எஸ்.பி. வேலுமணி மீதான ஒரு வழக்குதான். ஆனால் உள்ளாட்சித் துறையில் அமைச்சராக இருந்த காலம் முழுவதும் அவர் செய்த ஊழல் முறைகேடுகள் பட்டியல் பென்னம் பெரிது; பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார் என்கின்றன பத்திரிகை செய்திகள். அத்தனை ஊழல் முறைகேடுகளும் அறப்போர் இயக்கம் உள்ளிட்டவைகளால் ஆதாரங்களுடன் ஏற்கனவே ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இத்தனை முறைகேடுகளையும் தனிநீதிமன்றம் விசாரித்தால் இம்மியளவுகூட வேலுமணியால் தப்ப முடியாது என்கிற நிலைதான் உள்ளது என்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்.
Recommended Video

வேலுமணிக்கு கடும் நெருக்கடி
வேலுமணியைப் பொறுத்தவரை தம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அவதூறுகள், அரசியல் பழிவாங்கல், காழ்ப்புணர்ச்சி என மடைமாற்றம் செய்வதுதான் வாடிக்கை. அதேபாணியில்தான் அதிமுக அவைத் தலைவர் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டால் அத்தனை முறைகேடுகளையும் பழிவாங்குகிறார்கள் என்ற மூட்டைக்குள் திணித்துவிடலாம் என கனவு கண்டார் வேலுமணி. ஆனால் சட்டம் தன் கடமையை செய்யத் தொடங்கி இருக்கிறது. அதுவும் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ்... நிச்சயம் வேலுமணியால் தப்பிவிட முடியாது என்றே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் வேலுமணி ரெய்டில் சிக்கியிருப்பதை ஓபிஎஸ் தரப்பும் உள்ளூர ரசித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக அவைத் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து வேலுமணி தாமாகவே ஒதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்பதுடன் எடப்பாடி அணியின் அஸ்திவாரமாக இருந்தவர் அல்லவா? அந்த அஸ்திவாரமே ஆட்டம் காண்கிறது என்பதால்தான் ஓபிஎஸ் தரப்பு இப்போது ஹேப்பி அண்ணாச்சி மோடில் இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications