திரும்ப மன்னிப்பு கேட்க ரெடியா இருங்க.. “ஏன் இவ்வளவு பயம்?” - முதல்வர் ஸ்டாலினை சீண்டிய குஷ்பு!
மீண்டும் மன்னிப்பு கேட்க தயாராக இருங்கள் என திமுக அரசை குறிப்பிட்டு தெரிவித்துள்ளார் குஷ்பு.
சென்னை : "ஆர்.எஸ்.எஸ்ஸை பார்த்து திமுகவுக்கு பயமா? முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே.. எது உங்களை பயமுறுத்துகிறது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு.
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த முடிவை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பாஜகவைச் சேர்ந்த குஷ்பு.

ஆர்.எஸ்.எஸ் பேரணி
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்.எஸ்.எஸ் நடத்தத் திட்டமிட்டிருந்த பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை போலீசார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்.எஸ்.எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, உள்ளரங்கங்களில் பேரணியை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ்
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது என்றால் அதனை சரிசெய்யவேண்டியது காவல்துறையினரின் கடமை எனத் தெரிவித்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து பேரணிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அளித்த விண்ணப்பத்தை ஏற்று மார்ச் 5ஆம் தேதி பேரணி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் அனுப்பியது.

சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உளவுத்துறை சார்பாக கொடுக்கப்பட்ட தகவல் அடிப்படையில்தான், தமிழ்நாடு காவல்துறை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதி மறுத்ததாகவும், அதனை கண்டுகொள்ளாமல் அரசின் அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் தலையிட்டுள்ளது எனவும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்க ரெடியா இருங்க
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு விமர்சித்துள்ளார். குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும் கூட தமிழ்நாடு அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றமே அனுமதியே வழங்கும். அதற்கான பாடத்தை திமுக கற்க வேண்டிய நிலை ஏற்படும். மீண்டும் மன்னிப்பு கேட்க தயாராக இருங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.

பயமா இருக்கா முதல்வரே
மேலும், "ஆர்.எஸ்.எஸ்ஸை பார்த்து திமுகவுக்கு பயமா? பட்டால் தான் புரியும். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே.. எது உங்களை பயமுறுத்துகிறது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் குஷ்பு. ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு அப்பீல் செய்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications