பட படவென பட்டாசு வெடிக்குது.. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது ஏன்? பின்னால் இப்படி ஒரு காரணமா?
சென்னை: தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் கங்கா ஸ்தானம் செய்து புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர் பொதுமக்கள். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அன்று ஏன் பட்டாசு வெடிக்கப்படுகிறது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இதற்கு பின்னர் ஒரு ஆன்மீக காரணம் இருக்கிறது..
தீபாவளி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது பட்டாசு வெடிப்பதை தான். ஒவ்வொருவரும் வண்ணமயமான பட்டாசுகளை வெடித்து மகிழ்வது தீபாவளியின் பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.
ஆனால், இதற்குப் பின்னால் ஒரு ஆழமான ஆன்மிக அர்த்தம் இருப்பதை பலர் கவனிக்கவில்லை. காமம், குரோதம், கோபம், மோகம், மாச்சரியம் போன்ற தீய குணங்கள் மனிதர்களில் இருந்து நீங்க வேண்டும் என்பதற்காகவே தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்படுகிறது என நம்பப்படுகிறது.

பட்டாசு வெடிப்பது, அந்த தீய குணங்களைத் தூள் தூளாக்கும் ஒரு சின்னமாக கருதப்படுகிறது. அதேபோல் தீபாவளி அன்று புத்தாடை அணிதல், எண்ணெய் தேய்த்து குளிக்கும் கங்கா ஸ்நானம், தீப ஒளி வழிபாடு போன்றவை அனைத்தும் நமது முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரிய மரபுகள். அந்த வரிசையில் பட்டாசு வெடிப்பதும் மகிழ்ச்சி மற்றும் ஆன்மிக சின்னமாகக் கருதப்படுகிறது. இந்நாளில் சிலர் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து கவலை தெரிவித்து, பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கூறுகின்றனர்.
மறுபுறம், சிலர் "ஆண்டு முழுவதும் வாகனங்கள், தொழிற்சாலைகள் மூலம் மாசுபாடு ஏற்படுவது குறித்து யாரும் பேசவில்லை; ஆனால் ஒரு நாள் வெடிக்கும் பட்டாசுகளுக்கே குற்றம் சாட்டுவது சரியல்ல" என வாதிடுகின்றனர். எது எப்படியிருந்தாலும், அரசு சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை கட்டுப்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் அறிவிப்பின்படி, இந்த ஆண்டு தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நேரக் கட்டுப்பாடுடன் தீபாவளி கொண்டாடுவதன் மூலம் பாரம்பரிய மகிழ்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஒன்றாக நிலைநாட்ட முடியும்.












Click it and Unblock the Notifications