தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு.. காய்கறி & மளிகை கடைகளுக்குகூட தடை விதிக்கப்பட்டது ஏன்?
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்குகளைப் போல இல்லாமல் இந்த முறை காய்கறி மற்றும் பழக்கடைகள், மற்றும் மளிகைக் கடைகள் இயங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாகத் தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரம் வரை சென்றது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் முதலில் கடந்த 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் வைரஸ் பரவலின் வேகம் குறைந்திருந்ததோ தவிர, முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு
இதையடுத்து கொரோனா பரவல் குறித்த ஆலோசனைக்கு அமைக்கப்பட்ட சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்ற ஆலோசனை வழங்கினர். பின்னர் மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து மாநிலத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

தளர்வுகள் இல்லை
தமிழ்நாட்டில் முன்பு அமலிலிருந்த ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்பட்டிருந்தன. மேலும், கூடுதல் கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன. இதில் மருந்தகங்கள், பால் விநியோகம் உள்ளிட்ட மிக அத்திவாசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 6.00-10.00, நண்பகல் 12.00 - 3.00 , மாலை 6.00 - 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

காய்கறி கடைகள்
இருப்பினும், இந்த ஊரடங்கில் காய்கறி & பழக்கடைகள், மளிகைக் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் போதும் கூட காய்கறி மற்றும் மளிகைக் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், தமிழக அரசு அறிவித்த ஊரடங்குகளிலும் காய்கறி & பழக்கடைகள், மளிகைக் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு மட்டுமே விதிக்கப்பட்டது.

வாகனங்கள் மூலம் விற்பனை
காய்கறி & பழக்கடைகள், மளிகைக் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த ஒரு வாரம் காய்கறிகளும் பழங்களும் கூட்டுறவுத் துறையுடன் இணைந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் 1610 வாகனங்கள் மூலம் தினந்தோறும் 1160 மெட்ரிக் டன் அளவிற்குக் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் 2770 வாகனங்கள் மூலம் 2228 மெட்ரிக்டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

தடை ஏன்
ஆனாலும், அத்தியாவசிய பொருட்களான காய்கறி & பழங்கள், மளிகை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியும் ஒரு புறம் எழுந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக வைரஸ் பரவல் வேகம் குறைந்திருந்தாலும், எதிர்பார்த்த அளவு வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. மக்கள் முறையாக ஊரடங்கு விதிகளைப் பின்பற்றாமல் இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

விதிகள் பின்பற்றப்படவில்லை
இதற்கு முன்பு வரை, ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களை அனுமதித்து காய்கறி & பழங்கள், மளிகைக் கடைகள் இயங்க அனுமதி அளித்திருந்தது. ஆனால், பெரும்பாலான கடைகளில் இந்த விதிகள் பின்பற்றப்படவில்லை. ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள், தனிமனித இடைவெளிகூட பின்பற்றாமல், கடைகளை முற்றுகையிட்டனர். இதனால் கொரோனா பரவ இதுவே ஒரு வாய்ப்பாக அமைந்துவிடும் அபாயம் ஏற்பட்டது.

கிருமிநாசினிகள்
மேலும், சென்னை தவிர இதர மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள், சானிடைசர்களை கொண்டு சுத்தப்படுத்தவில்லை. இதனால் கடைகளுக்கு வரும் யாரேனும் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவும் அபாயம் ஏற்பட்டது.

மக்கள்கூட்டம்
குறிப்பாக, அடுத்த ஒரு வாரம் காய்கறி, பழம், மளிகை பொருட்கள் வண்டிகளில் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு தெளிவாக அறிவித்த போதும், கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன. மக்கள் மாஸ்க்குகளை அணிந்திருந்தாலும், பெரும்பாலான இடங்களில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை. மக்களின் அலட்சியத்தால் வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வல்லுநர்கள் கருத்து
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே காய்கறி & பழக்கடைகள், மளிகைக் கடைகள் இயங்க தமிழக அரசு இயங்க தடை விதித்துள்ளது. அதேபோல காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும் வண்டிகளை முறையாக கிருமிநாசினியைக் கொண்டு சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விற்பனை வண்டிகளில் நடைபெறுவதால் மக்கள் கூட்டத்தையும் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகத் தளர்வுகளற்ற இந்க ஊரடங்கில் கொரோனா பரவல் குறையும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications