எல்லா ஆவணமும் இருக்கு.. எதுக்கு 500 பைன்? சென்னையில் டிராபிக் போலீசிடம் டிரைவர் வாக்குவாதம்
சென்னை: தன்னிடம் அனைத்து ஆவணங்களும் இருக்கும் போதும் 500 ரூபாய் அபராதம் ஏன் விதிக்கிறீர்கள் என்று போக்குவரத்து போலீசாரிடம் வாடகை வாகன ஓட்டுநர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உரிமம் இருந்தும் தனது வாகனத்திற்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டதாக சென்னை கொளத்தூரில் போக்குவரத்து போலீசிடம் டிரைவர் ஒருவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்த விவரம் வருமாறு:-

சென்னை கொளத்தூர் செந்தில் நகர் சிக்னல் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சிறிய சரக்கு வாகனம் ஒன்று பள்ளி பாடப்புத்தகங்களை ஏற்றிக்கொண்டு வந்தது. அந்த சரக்கு வாகனத்தை மறித்த டிராபிக் போலீசார் விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி 500 ரூபாய் அபராதம் விதிக்க முற்பட்டுள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த சரக்கு வாகனத்தின் டிரைவர் எந்த காரணத்திற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கிறீர்கள் என்று கேட்டு போலீசிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் டிராபிக் போலீஸ் அணிந்த சீருடையில் அவருடைய பெயர் பேட்ஜ் இல்லை. இதனால், நீங்கள் போலீஸ்தானா.. உங்களின் ஆவணத்தை காட்டுங்கள் என்று ஓட்டுநர் போக்குவரத்து போலீசிடம் கேட்டுள்ளார்.
ஆனால், அந்த டிராபிக் போலீசோ, அதையெல்லாம் காட்ட முடியாது என்று பதிலளித்ததாக தெரிகிறது. அந்த கார் டிரைவரிடம் டிரைவிங் லைசன்ஸ், வாகனத்திற்கான ஆவணம் அனைத்தையும் காட்டிய பிறகும் டிராபிக் போலீஸ் அபராதம் விதிப்பதிலேயே குறியாக இருந்ததாக அங்கிருந்த வாகன ஓட்டிகள் கூறினர். தன்னிடம் அனைத்து ஆவணங்களும் இருக்கும் நிலையில், ஏன் அபராதம் விதிக்கிறீர்கள் என்று அந்த வாகன ஓட்டுநர் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடை ஏற்றி சென்றதால்தான் விதி மீறல் என்று அபராதம் விதிக்கப்படும் என்றும் தனது வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்குதான் பொருட்கள் இருந்தன. ஆனால், விதிமீறல் என்று எந்த அடிப்படையில் வழக்குப்பதிவு செய்கிறீர்கள் என ஆவேசமாக கேட்டபடியே இருந்தார். மேலும், பணம் என்ன மரத்திலேயா காய்க்கிறது.
அனைத்து ஆவணங்களையும் காட்டிய பிறகு அப்ஸ்ட்ரக்ஷன் என 500 ரூபாய் போடு என்கிறார். என்ன அப்ஸ்ட்ரக்ஷன்.. நாங்க என்ன படிக்காத ஆளா.. பிஎஸ்சி முடித்து இருக்கிறேன். என் போதாத காலம் வாகனம் ஓட்டி வருகிறேன்" என ஆதங்கத்துடன் அந்த கார் டிரைவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். அப்போது அங்கு இருந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் டிரைவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான காட்சிகள்தான் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, அந்த டிரைவர் புறப்பட்டு சிறிது தொலைவிற்கு சென்றதும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செல்போனுக்கு மெசேஜ் சென்றதாகவும், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை ஓட்டி வந்ததாக கூறி அந்த ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
வீடியோவிலேயே சரக்கு வாகனத்தின் டிரைவர் தன்னிடம் உள்ள ஆவணங்களை காட்டும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் நிலையில், எந்த அடிபடையில் அபராதம் விதிக்கப்பட்டது என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறனர். இந்த வீடியோ காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் உரிய விசாரணைக்கு பிறகு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் விதியை மீறி பல்வேறு இடங்களில் அபராதம் விதிப்பதாகவும், அபராதம் விதிப்பதில் மட்டுமே அவர்கள் குறியாக செயல்படுவதாகவும் வாகன ஓட்டிகள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் காவல்துறையினருக்கு போதிய அறிவுறுத்தலை விடுக்க வேண்டும் என்பதும் வாகன ஓட்டிகளின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications