"தமிழக முதலமைச்சர் விஜய் மவுனமாக இருப்பது ஏன்? ஆறுதல் கூட சொல்லல".. கோவை சிறுமியின் தாயார் வேதனை!
கோவை: "இதுவரை தமிழக முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவிக்கவில்லை, அறிக்கை கூட விடவில்லை. சிறுமி கொலையில் தமிழக முதலமைச்சர் விஜய் மவுனமாக இருப்பது ஏன்? பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது தொடர்பாக கூட முதலமைச்சர் இதுவரை பேசவில்லை." என கோவை சிறுமியின் தாயார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த 10 வயது சிறுமி ஒருவர், வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோரும், உறவினர்களும் அக்கம் பக்கத்தில் தேடினார்கள். ஆனால், சிறுமி கிடைக்கவில்லை.

எனவே, சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி அருகிலுள்ள மளிகைக் கடைக்குச் சென்றபோது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அவரை இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றது தெரியவந்தது.
இந்த சூழலில், நேற்று மாலை கண்ணம்பாளையம் குளக்கரையில் சிறுமியின் சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையில், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்கக் கோரியும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும் உறவினர்களும் பொதுமக்களும் திருச்சி சாலையில் சூலூர் காவல் நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, கைதான நபர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 33 வயதான கார்த்தி என்பதும் அவர் 18 ஆண்டுகளாக சூலூர் அடுத்த பள்ளப்பாளையம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. மேலும், அந்த சிறுமியை கார்த்திக் கடத்தி கொலை செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மோகன்ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தப்பிச் செல்ல முயன்ற கார்த்தி கால் முறிந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் உடற்கூராய்வு நடந்து வருகிறது.
கோவையில் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தையின் தாய் பேசுகையில், "இதுவரை தமிழக முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவிக்கவில்லை, அறிக்கை கூட விடவில்லை. சிறுமி கொலையில் தமிழக முதலமைச்சர் விஜய் மவுனமாக இருப்பது ஏன்? பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது தொடர்பாக கூட முதலமைச்சர் இதுவரை பேசவில்லை. எங்களுக்கு நீதி கிடைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இனிமேல் இதுபோன்ற எந்தச் சம்பவமும் நடக்கக்கூடாது. குழந்தை காணாமல் போன சில மணி நேரத்திலேயே புகார் அளித்தும் துரித நடவடிக்கை இல்லை. குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகக் கூறி போலீசார் ஏமாற்றிவிட்டனர். எங்களை சமாதானம் செய்யவே போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். என் மகளின் உடலை வாங்க மாட்டோம்" எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் சித்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "முதலமைச்சர் விஜய் இதுவரை எங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை. சம்பவம் அவரது கவனத்துக்கு சென்றிருந்தும் எந்தவிதமான பதிலும் இல்லை என்பது மிகுந்த வருத்தமாக உள்ளது. உடனடியாக முதலமைச்சர் வருத்தம் தெரிவித்து எங்களை ஆறுதல் கூற வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
மேலும், "இந்த கொடூர குற்றத்திற்கு காரணமானவருக்கு மிகக் கடுமையான தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும். நேற்றைய தினம் காவல்துறை அதிகாரிகள் மாற்றி மாற்றி முரண்பட்ட தகவல்களை தெரிவித்தனர். இது எங்களுக்கு மேலும் வேதனை அளித்தது" என்று குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications