பொங்கல் பரிசு திட்டம்.. ஸ்டாலின் நிகழ்ச்சியில்.. மா.சு எங்கே.. ஆளையே காணோமே.. இப்படி ஒரு காரணமா?
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேசன் கடையில் இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியனின் தலையை எங்கும் காணவில்லை.
விழா நடந்த பகுதி சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமாரின் ஆதிக்கத்தில் இருக்கும் பகுதி. அமைச்சர் மா.சு. வின் சொந்த தொகுதி சைதாப்பேட்டை. தென்சென்னையின் மாவட்ட செயலாளரும் மா.சு.தான். தென்சென்னையில் எந்த ஒரு விழாவில் முதல்வர் கலந்து கொண்டலும் மா.சு. வும் முதல்வருடனே இருப்பார்.

மா.சு. இல்லாமல் முதல்வரும் தென்சென்னையில் எந்த விழாவுக்கும் தேதி தரமாட்டார். அப்படிப்பட்ட சூழலில், விழாவில் மா.சு. இல்லாதது திமுகவினரிடையே புருவம் உயர்த்த வைத்துள்ளது. இது பற்றி திமுகவில் விசாரித்தபோது, "விழாவில் கலந்து கொள்ள மா.சு. புறப்பட்டுள்ளார். இதையறிந்த முதல்வர், விழாவுக்கு வரவேண்டாம் ; சட்டமன்றத்துக்குப் போங்கள் என கூறிவிட்டார். அதனால் தான் விழாவுக்கு மா.சு. வரவில்லை" என்கின்றனர்.
பொங்கல் பரிசு ரூபாய் 1000 ஏன் இல்லை:
பொங்கல் பரிசுத்தொகை இந்த முறை குறைக்கப்பட்டு உள்ளது. அதே போல் ரொக்கம் ரூபாய் 1000 வழங்கப்படவில்லை.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தில் ரொக்க பணம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை செய்து உள்ளது. ஆனால் மகளிர் உரிமை தொகை, புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. இதனால் நிதி நெருக்கடி அதிகம் உள்ளது.
இதை சமாளிக்கவே தமிழ்நாடு அரசு இந்த முறை பொங்கலுக்கு ரொக்க பரிசு கொடுக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வருடம் வெல்லம் வழங்கப்படவில்லை. வெல்லம் உருகிவிடுகிறது.. அதேபோல் இது தொடர்பாக புகார்கள் வைக்கப்படுகின்றன என்பதால் சர்க்கரை வழங்கப்படுகிறது. இந்த நிலையில்தான் வெல்லம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கு காரணமாக இந்த முறை வெல்லம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மற்றபடி ரூ.1000 தொடர்பான அறிவிப்பு வெளியாவது சந்தேகம் என்கிறார்கள்.
பரிசு என்ன?:
பொங்கல் பரிசுத்தொகை தொடர்பாக தமிழக அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவிப்பில், 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தார்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும். இதன் மூலம் மொத்தமாக 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் என்று அறிவித்து உள்ளனர்.
மகளிர் உரிமை தொகை:
பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை என்றாலும் மகளிர் உரிமை தொகை இன்று வழங்கப்பட்டது. இன்று வழங்கப்படாதவர்களுக்கு நாளை உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொங்கலை முன்னிட்டு.. முன்கூட்டியே அரசு சார்பாக இந்த தொகை வழங்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications