Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்த்தாயை அவமதித்த ஆளுநரின் பக்கம் சீமான் நிற்பது ஏன்? ரகசியம் என்ன? பழனியப்பன் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முழுமையாகப் பாடத் தெரியும் எனத் தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, ஏன் அந்த அரங்கத்தில் ஒருவரியை விட்டுப் பாடும்போது அதைக் கண்டித்துப் பேசவில்லை என்றும் மறுபடியும் முழுமையாகப் பாடச் சொல்லி ஏன் கூறவில்லை என்றும் இயக்குநர் கரு பழனியப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசு மழைக்காக எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாராட்டிப் பேசிய ஈரம்கூட இன்னும் காயவில்லை. அதற்குள் இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே பனிப்போர் மீண்டும் தொடங்கி இருக்கிறது. தூர்தர்ஷன் பொன்விழா மற்றும் இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.

cm stalin r n ravi

அங்கே ஒலித்த தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை தவிர்த்துவிட்டுப் பாடப்பட்டது. அந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவரது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அதற்கு, 'முதல்வர் ஸ்டாலின் தன்மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தனக்கு எதிராக இனவாதக் கருத்தைத் தெரிவித்துள்ளார்' என்று மறுத்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, 'திராவிடம் என்பது ஒரு நிலப்பரப்பைக் குறிப்பது. அது இல்லை என நாங்கள் சொல்லவே இல்லை. அதை ஏற்றுக்கொள்கிறோம். திராவிடம் என்பது பஞ்ச தேசங்களைக் கொண்டது. அதில் முதல் மாநிலமாகக் குஜராத்தான் உள்ளது. அப்படிப் பார்த்தால் பிரதமர் மோடியே திராவிடர்தான்' எனப் பேசியிருந்தார். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'தங்களின் ஆட்சி வந்தால் இந்தப் பாடலையே நீக்கிவிடுவோம்' என்றும் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்தச் சர்ச்சை தொடர்பாக திமுக ஆதரவாளரும் இயக்குநருமான கரு பழனியப்பன் ஒரு பேட்டியை அளித்திருக்கிறார். அதில் ஆளுநரின் நடவடிக்கையில் உள்ள பல்வேறு சந்தேகங்கள் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் சீமானின் கருத்திற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பழனியப்பன் பேசுகையில், "இத்தனை ஆண்டுகள் நடந்த விழாவில் ஒருமுறைகூட தமிழ்த் தாய் வாழ்த்தின் வரி விடுபடவே இல்லை. ஆனால், ஆளுநர் ரவி பங்கேற்கும் விழா என்றதும் ஒருவரியைக் கவனமாகப் பாடாமல் விட்டிருக்கிறார்கள். கேட்டால் இதற்கும் ஆளுநருக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள். அது எப்படி? ஆளுநரின் விருப்பம்தான் அது. சரியாக அவருக்காகவே நடந்துள்ளது.

கேட்டால் உடனே ஆளுநர் ரவி, 'தமிழ்த் தாய் வாழ்த்து துல்லியமாகப் பாடத் தெரியும். தமிழ் மீது எனக்குப் பற்று இருக்கிறது' என்று விளக்கம் அளிக்கிறார். இவர்தானே 'இருமொழிக் கொள்கையால் மற்ற மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு துண்டிக்கப்பட்டுள்ளது' என்று சொன்னவர்? மராட்டிய மொழியில் சிறந்த இலக்கியம் இருக்கிறது என்றுசொல்கிறார்கள் இல்லையா? மராட்டிய மொழி படங்களை வெளிமாநில மக்கள் பார்க்கிறார்கள்? சைராட் என்று படம் கடைசியாகப் பலரும் பார்த்தது. ராஜஸ்தான் படம் பார்க்கிறோமா? பீகார் படம் பார்க்கிறோமா? கொங்கினி படம் பார்க்கிறோமா? இந்த மொழிகளைப் பேசும் பலர் தமிழ்ப் படம் பார்க்கிறார்கள். ஏன் பார்க்கிறார்கள்? இருமொழிக் கொள்கையை நாம் கடைப்பிடிப்பதால்தான்.

இப்போதுதான் நம்மைப் பின்பற்றிப் பல மாநிலங்கள் விழித்துக் கொண்டிருக்கின்றன. நாம் பலருக்கும் சொல்ல விரும்புவது ஒன்றுதான். நமக்கு தேசியப் பறவை உண்டு. தேசிய விலங்கும் உண்டு. ஆனால், தேசிய மொழி என ஒரு மொழி கிடையாது. அலுவல் மொழி பட்டியலில் பல உள்ளன. அதில் இந்தியும் உள்ளது. தமிழும் உள்ளது. அலுவல் மொழியாக 3 மொழிகளில் வைத்துள்ள மாநிலங்களில் அம்மாநிலத்தின் தாய்மொழி என்பது அரசு விண்ணப்பப் படிவங்களில் இருக்காது.

ராஜஸ்தானில் ஒரு வங்கிக் கணக்கில் வழங்கப்படும் படிவத்தில் இந்திதான் இருக்கும். ராஜஸ்தானில் இருக்காது. அதான் நிலைமை. இன்றைக்குப் படிப்படியாக இந்தியை தமிழ்நாட்டில் நுழைத்துவிட்டார்கள். பல இடங்களில் தமிழ் இல்லை. முழுமையாக ஆட்சி மொழியாகத் தமிழ் இருக்கும் நாடு சிங்கப்பூர். அங்கே எல்லா அரசு அலுவலர்களிலும் தமிழ் உள்ளது.

இப்போது இவ்வளவு விளக்கம் கொடுத்திருக்கிறார் ஆளுநர். அவருக்குத்தான் முழுமையாகத் தமிழ்த் தாய் வாழ்த்து தெரியும் இல்லையா? அங்கே அவர் என்ன செய்திருக்க வேண்டும்? ஒருவரி விடுபட்ட உடனேயே அதை நிறுத்தி இருக்கவேண்டாமா? மறுமுறை பாடுங்கள் எனச் சொல்லி இருக்கவேண்டுமா? இல்லையா? முதல்வர் அறிக்கை விட்டபிறகு 'என் மீது இன வெறுப்பு கொண்டிருக்கிறார்கள்' என்று ஆளுநர் சொல்கிறார். முதல்வருக்கு முன்பாகவே அவர் வரி விடுபட்டதற்காக அரங்கத்திலிருந்த போதே கண்டித்திருந்தால் யார் கேட்கப் போகிறார்கள். அதை ஏன் ரவி செய்யவில்லை?" என்று பேசி இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை நீக்கிவிடுவோம் என்று சீமான் பேசி இருப்பதற்கு பதிலளிக்கும்வகையில் பேசிய பழனியப்பன், "ரொம்ப காலமாக ஆட்சிக்கு வருவேன் என்று சீமான் சொல்கிறார். மீறி தமிழ்த் தாய் வாய்த்துப் பாடினால் சீமான் 'பச்சை' மட்டை வைத்து அடிப்பாரா? நாங்கள் வந்தால் கருணாநிதி நினைவிடம் கட்டவிட மாட்டோம். நாங்கள் வந்தால் தமிழர் அல்லாதவர்களை வாழவிடமாட்டோம். இப்படி சீமான் பேசிக் கொண்டே இருக்கிறார். முதலில் ஆட்சிக்கு அவர் வரட்டும்.

அண்டை நாட்டில் நமது ரத்த சொந்தங்கள் இறந்ததை வைத்து தமிழ்நாட்டில் சீமான் மலிவான அரசியலைச் செய்கிறார். ஆனால், சொந்த நாட்டில் நாங்கள் வாழும் மண்ணில் எங்கள் தமிழ்த் தாய் வாழ்த்தில் உள்ள ஒருவரியை அவமதிக்கும்படி விட்டுவிட்டுப் பாடி இருக்கிறார்கள். அதைக் கண்டித்துப் பேசாத சீமான், ஆட்சிக்கு வந்தால் பாடலையே தூக்குவோம் என்கிறார். அப்படி எனில் அவர் யார் பக்கம் நின்று பேசுகிறார்?

கடந்த 3 ஆண்டுகளில் ஸ்டாலின் மீது எவ்வளவு மலிவான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. என்றைக்காவது என் மீது மலிவான விமர்சனம் வைக்கிறார்கள் என்று அவர் சொல்லி இருக்கிறாரா? ஆளுநர் முதல்வர் என்ன சொல்கிறார் என்பதற்கு மட்டும்தான் பதிலளிக்க வேண்டும். யாரோ ரோட்டில் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டு, ஏதோ அதை முதல்வரே செய்யச் சொன்னார் என்பதைப்போல் விமர்சிக்கக் கூடாது" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+