இவங்களை முதல்ல மாற்றுங்க! அமைச்சரவை மாற்றத்திற்கு இடையில்.. ஸ்டாலின் தந்த ட்விஸ்ட்! விக்கித்த தலைகள்
சென்னை: அமைச்சரவை மாற்றத்திற்கு இடையில் தமிழ்நாட்டில் முக்கியமான வேறு சில நிர்வாக மாற்றங்களும் இருக்கும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 2 ஆண்டுகளாக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக சார்பாக மேடை மேடையாக கட்சி நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அமைச்சரவை மாற்றத்தோடு சேர்ந்து மாவட்ட செயலாளர்கள், துறை ரீதியான செயலாளர்கள் மாற்றமும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஸ்டாலின் ஆய்வு: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக பிற மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு பணிகளை செய்து வருகிறார். அதிகாரிகள் செயல்பாடு, அவர்கள் பணி செய்யும் விதம், மாவட்ட பிரச்சனைகள் எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே இந்த ஆய்வு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் வேலூர் மண்டலத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டு கள ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வு பணிகளை வைத்து பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். பலருக்கு அமைச்சரவை செயலாளர்கள் பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
கடந்த புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம், பதவி உயர்வு தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது. புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் மொத்தம் 43 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அவர்கள் பணியில் சேர்ந்த வருடம், அவர்கள் பணியாற்றிய துறைகளின் அனுபவம் ஆகியவற்றை வைத்து இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் 14 பேருக்கு selection grade ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
2014-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த 13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தரப்பு உள்ளது. இவர்களுக்கு junior administrative grade அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்களும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தாம்பரம், திருப்பூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். விருதுநகர், தேனி, தென்காசி மாவட்ட ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அமைச்சரவை மாற்றம்: இந்த நிலையில் தற்போது அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதும், அமைச்சர்களுக்கு ஏற்ற அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக அதிகாரிகள் மாற்றம் குறித்து அமைச்சர்களிடன் கருத்தை சமீபத்தில் கேட்டறிந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
அதில் 20-க்கும் மேற்பட்ட துறைகளில் அமைச்சர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் ஒத்துப் போகவில்லை. அமைச்சர்களுக்கு தெரியாமலே பல விசயங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். இது ஒரு கட்டத்தில் அமைச்சர்களுக்கு தெரியவரும் போது அவர்களுக்கு கோபம் வருகிறது.
உடனே தனது துறையின் உயரதிகாரிகளிடம் அமைச்சர்கள் கோபம் காட்டும் போது, முதல்வரின் செயலாளரை கேட்டுக்கோங்க சார் என்று பதில் வருகிறதாம். எங்களுக்கு எதுவும் தெரியாது.. முதல்வரிடம் பேசுங்கள் என்று அதிகாரிகள் கூலாக சொல்லிவிடுகிறார்களாம். இதனால் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பல துறைகளில் சின்க் இல்லாமல் செல்கிறதாம்.

அமைச்சர் ஒரு உத்தரவு போட அது நடைமுறைக்கு வர தாமதமும் ஆகிறதாம். அதிகாரிகள் சிலர் அமைச்சரிடம் ஆலோசனையே செய்யாமல் தான் போன போக்கில் முடிவுகளை எடுக்கிறார்களாம். சில அதிகாரிகள் தாங்கள்தான் அரசு என்பது போல செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்களாம்.
இதனால் என்ன செய்வதென தெரியாமல் மனம் புழுங்கிய அமைச்சர்கள், முதல்வர் ஸ்டாலினிடம் தங்கள் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்து அமைச்சரவை மாற்றத்தோடு சேர்ந்து அதிகாரிகள் மாற்றமும் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மாற்றம் எப்போது?: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில்தான் முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை முன்னிட்டு இன்று அல்லது நாளை அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications