சல்லி சல்லியா நொறுங்கிய பாஜக கணக்கு.. ஆளுநர் ரவி திடீர் சைலண்ட்.. "இது"தான் காரணமா.. பலே திமுக
ஆளுநர் ரவி அமைதி போக்கை கையில் எடுக்க காரணம் என்ன
சென்னை: பாஜக ஒரு கணக்கு போட்டால், திமுக வேறு ஒரு கணக்கு போட்டு, அதை நொறுக்கி தள்ளி கொண்டிருக்கிறது.. இதையடுத்து, பாஜக வேறு வழியின்றி அடக்கி வாசிக்கும் நிலைமைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது..!
தமிழக பாஜகவை பொறுத்தவரை திமுக மட்டும்தான் ஒரே குறியாக நினைத்து செயல்பட்டு வருகிறது.. அதற்கேற்றார்போல், "நமக்கு முதல் எதிரியே திமுகதான், அதை மையமாக வைத்து எம்பி தேர்தலுக்கு வேலை செய்யுங்கள்" என்று அமித்ஷாவும் அண்ணாமலையிடம் அறிவுறுத்தியதாக செய்திகளும் கசிந்தன.
பாஜக என்னதான் தங்களை எதிர்த்தாலும், திமுகவும் எதற்குமே சளைக்கவில்லை.. அதிலும் ஆளுநர் விஷயத்தில் திமுக காட்டிய அதிரடியை பார்த்து, பாஜக மேலிடம் சற்று அதிர்ந்துதான் போனதாம்..

ஆளுநர் ரவி
நீட் விவகாரத்தில் அழுத்தம் தந்தால் திமுக ஓரளவு அடிபணியும் என்று பாஜக கணக்கு போட்டது.. அதனால்தான், ஆளுநர் ரவியை வைத்து பலவாறாக நெருக்கடியும் ஏற்படுத்தியது.. மற்றொருபுறம் பெட்ரோல் டீசல் விலைஉயர்வை கூட்டி, மாநில அரசுகளுக்கு நெருக்கடியும் தர யோசித்தது.. ஆனால், பிரதமரையே காட்டமாக ஸ்டாலின் கேள்வி எழுப்பியது, தேசிய அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திவிட்டது.. அதுமட்டுமல்ல, நீட் விவகாரத்துக்கு காட்டிய எதிர்ப்பை, அப்படியே உல்டாவாக்கி, ஆளுநர் பக்கம் திருப்பிவிட்டது திமுக..

புறக்கணிப்பு
கறுப்பு கொடி, தேநீர் விருந்து புறக்கணிப்பு, ஆளுநரை மாற்றக்கோரி மக்களவையில் போட்ட தீர்மானம் போன்ற தனக்கு எதிராக திமுக எடுத்த ஒவ்வொரு நிகழ்வையும் கண்டு, ஆளுநர் மாளிகையே கடுமையான அதிருப்திக்கும் உள்ளாக்கியிருக்கிறதாம்.. இதனால், திமுகவை மேலும் கடுப்பாக்க முயற்சிகளை கையில் எடுக்க உள்ள நிலையில்தான், திடீரென அதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுவிட்டதாம். அதற்கு காரணம், குடியரசு தலைவர் தேர்தல் வரப்போவதுதான்.

குடியரசு தலைவர் தேர்தல்
இப்போதைக்கு பாஜக தரப்பில், 50க்கும் குறைவான சதவீத ஆதரவுதான் கையில் உள்ளது.. அதனால், நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரிய கட்சி தயவும், பாஜகவுக்கு தேவையாக இருக்கிறது.. அந்த வகையில், 3வது பெரிய கட்சி திமுகதான்.. அதனால், திமுகவின் ஆதரவை பெற பாஜக ஆர்வம் காட்ட துவங்கி உள்ளதாக தெரிகிறது.. அதனாலேயே திமுக அரசுடன் மோதல் போக்கில் ஓரளவு கைவிட யோசித்து வருகிறதாம்.. ஆளுநர் ரவியையும், திமுக மீதான காட்டத்தை குறைக்க சொல்லி உள்ளதாம்..

நொறுங்கும் கணக்கு
2 முறை டெல்லிக்கு ஆளுநர் ரவி ஏன் அவசர அவசரமாக சென்றார் என்பதற்கான விடை இதுவரை தெரியப்படாமல் இருந்த நிலையில், அவரை சற்று அமைதிகாக்கும்படி சொல்லவே, மேலிடம் அழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.. பாஜக இப்படி கணக்கு போட்டாலும், அதற்கு திமுக எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று தெரியவில்லை.. பெட்ரோல் டீசல் விலை உயர்வு முதல், நீட் விவகாரம் வரை திமுகவுக்கு பொதுமக்களிடம் அதிருப்தியை பெற்று தந்ததே மத்திய பாஜகதான்..

மாநில அரசுகள்
அப்படி இருக்கும்போது, பாஜகவுக்கு தன்னுடைய ஆதரவை திமுக தெரிவிப்பது சந்தேகம்தான் என்கின்றனர் ஒரு தரப்பினர். இன்னொரு தரப்பினரோ வேறு விதமாக சொல்கிறார்கள்.. அதாவது, மத்திய பாஜகவை பகைத்து கொண்டு எந்த ஒரு மாநிலத்தினாலும் ஆட்சி செய்ய முடியாது.. எவ்வளவுதான கருத்து மோதல்கள், அதிருப்திகள் இருந்தாலும், மத்திய அரசின் தயவு கண்டிப்பாக தேவை என்பதை மாநில அரசுகள் உணராமல் இல்லை.. அதனால், ஒரேயடியாக பாஜகவை பகைத்து கொள்ளவும் முடியாது.. அப்படி பகைத்து கொண்டால், அது அந்தந்த மாநில மக்களைதான் நேரடியாக பாதிக்கும்..

பிளஸ் பாயிண்ட்
எனவே, நாளுக்கு நாள் மாநில அரசு நிதி நெருக்கடியில் சிக்கி வரும் நிலையில், திமுகவும் இதை உணர்ந்து ஒரேடியாக மோதல் போக்கை கையில் எடுக்காது.. அதேசமயம், பாஜக பக்கமும் சாய்ந்து விடாமல் நடுநிலைமையுடன் நின்று பரிசீலிக்கும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.. ஆக, குடியரசு தலைவர் பதவி விவகாரத்தில் பாஜகவுக்கு சாதகமான சூழல் ஏற்பட போகிறதோ இல்லையோ, திமுக மீதான காட்டத்தை பாஜக குறைத்துள்ளதே அக்கட்சிக்கு ஒரு சறுக்கல்தான் என்றும், இதுவே திமுகவுக்கு ஒரு பிளஸ்தான் என்றும் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

ஆளுநர் ரவி
இன்னொரு கணக்கும் ஓடிக் கொண்டிருக்கிறது.. துணை குடியரசுத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடுவுக்கு குடியரசுத் தலைவர் ஆகும் எண்ணம் இருப்பதுபோலவே, ஆளுநர் ரவிக்கு துணை குடியரசு தலைவர் ஆகும் எண்ணமும் உள்ளதாக தெரிகிறது.. அதனால், இப்போதைக்கு திமுக பக்கம் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, துணை குடியரசு தலைவர் விஷயத்தில் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகின்றன.. எனினும், இதன் பலாபலன்கள் எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications