கிளாம்பாக்கம் விவகாரத்தில் ஆம்னி பேருந்துகளிடம் அரசு இவ்வளவு கறார் காட்டுவது ஏன்? எதார்த்தம் என்ன?
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரத்தில் ஆம்னி பேருந்துகளிடம் தமிழக அரசு இவ்வளவு கறார் கட்டுவது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும். இதன் பின்னணி என்ன? ஏன் ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வந்து செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள் என்பது குறித்தும் கேள்விகள் இருக்கும்.. இந்த இரு விஷயங்களிலும் உள்ள எதார்த்தங்களை இப்போது பார்ப்போம்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை போல் தமிழ்நாட்டில் சர்ச்சையாக்கப்பட்ட மற்றொரு விஷயம் சம காலத்தில் இல்லவே இல்லை.. அந்த அளவிற்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதற்கு பின்னால் அரசியல் செய்யப்படுவதாக ஆளும் கட்சியும் தமிழக அரசு தரப்பும் விளக்கம் அளித்து வருகிறது. அதேநேரம் எதிர்க்கட்சிகளோ அவசர கதியில் திறந்துவிட்டதாக தினசரி குற்றம்சாட்டி வருகின்றன. போதிய வசதிகள் இல்லை என்பதை குற்றச்சாட்டாக முன் வைக்கின்றன.

முன்பு அடையாறு, வேளச்சேரி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் கணிசமான ஆம்னி பேருந்துகள் வந்து பயணிகளை ஏற்றி சென்று வந்தது. அந்த பேருந்துகள் எதுவுமே இப்போது சென்னைக்குள் வரவில்லை.. கிளாம்பாக்கம் வந்து தான் ஏறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் கோயம்பேடு தொடங்கி அரும்பாக்கம், வடபழனி, கேகே நகர், ஈக்காட்டு தாங்கல், சைதாப்பேட்டை, அசோக் நகர், கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், விமான நிலையம், பல்லாவரம், மீனம்பாக்கம், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் , வண்டலூர், சேலையூர், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் என ஒட்டுமொத்த சென்னை மக்களும் ஆம்னி பேருந்துகளில் லக்கேஜ்களுடன் ஏறி எளிதாக சொந்த ஊர் சென்று வந்தனர்.
இவர்கள் எல்லாருமே இப்போது கிளாம்பாக்கத்திற்கு சுமார் 30 கிலோ மீட்டர் வரை பயணித்து வர வேண்டியுள்ளது. அது எப்படி வர வேண்டும். அரசு பேருந்தில் மட்டுமே வர முடியும். லக்கேஜ்களை வைத்து கொண்டு அரசு பேருந்தில், குழந்தைகளுடன் 30 கிலோமீட்டர் நின்று செல்வதை யாரும் விரும்பவில்லை என்பது கசப்பான உண்மை.
அதேபோல் ஊரில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு வந்த உடன், அங்கிருந்து அரசு பேருந்தில் லக்கேஜ்களுடன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பயணிப்பது சவாலானதாக பலர் நினைக்கிறார்கள். இதுதான் சிக்கலுக்கு முதல் காரணம்.. குறைந்த பட்சம் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைத்த பின்னர், கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்தை திறந்திருந்தால் கூட இந்த விமர்சனங்கள் எதுவுமே வந்திருக்காது. ஆனால் அதற்கு முன்னரே திறந்தது தான் மக்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்னொரு பிரச்சனையும் கிளாம்பாக்கத்தில் இருக்கிறது. அதுவும் தூரம் சம்பந்தப்பட்டது தான். சென்னைக்குள் இரவு 7 மணிக்கு கிளம்பும் ஒருவர் கிளாம்பாக்கம் வரவே 9 மணி ஆகிவிடும். அவர் இரவு 10 மணிக்கு வேலை முடிந்து கிளம்பினால் சாப்பிட்டு கிளாம்பாக்கம் வர 12 மணிக்கு மேல் ஆகிவிடும். அதற்குள் பல பேருந்துகள் பேருந்து நிலையத்தை விட்டே கிளம்பிவிடும்.. கிளாம்பாக்கம் சென்னைக்குள் இல்லை.. முன்பு கோயம்பேட்டில் இருந்து கிளம்பும் பேருந்துகளின் நேர கணக்குப்படி பார்த்தால், சுமார் ஒன்றரை மணி நேர பயணத்திற்கு பிறகே கிளாம்பாக்கம் வர முடியும். எனவே மக்கள் கிளாம்பாக்கம் வர கண்டிப்பாக நேரம் ஆகும். அதற்கு மாற்று தீர்வினை ஏற்படுத்த உடனடியாக மெட்ரோ பணிகளை துவங்குவது எளிதானதாக இருக்கும்.
கிளாம்பாக்கம் விவகாரத்தில் ஆம்னி பேருந்துகளிடம் அரசு இவ்வளவு கறார் காட்டுவது ஏன் தெரியுமா? கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டிய பின்னர் அரசின் உத்தரவை ஏற்காமல் கோயம்பேட்டில் வைத்து பயணிகளை ஏற்றினால், பலரும் கோயம்பேட்டில் ஏறுவதற்கு போவார்கள். அப்படி போனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். அதுமட்டுமின்றி, ஆம்னி பேருந்துகள் மட்டும் உள்ளே வந்து பயணிகளை ஏற்றினால், அரசு பேருந்துகளில் ஏறுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். அரசு பேருந்துகளுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.. இதுவே அரசு கறார் காட்ட காரணமாக உள்ளது.
அதேநேரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உரிய வசதிகள் இல்லை என்று கூறுவது எல்லாம் அரசியலாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தண்ணீர், உணவு, பேருந்துகள் என நிறைய வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. நன்கு திட்டமிட்டு, கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் நவீன கட்டமைப்புடன் சரியான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் கடைகள் மற்றும் ஏடிஎம்கள் அதிக அளவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்து நிலையம் திறந்த பிறகே படிப்படியாக பல வசதிகளை கொண்டு வர முடியும் என்பதால், அனேகமாக அடுத்த ஒரு மாதத்திற்குள் கிளாம்பாக்கம் குறித்த விமர்சனங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications