யோசித்து செஞ்சது ஒன்று.. ஆனால் நடந்தது ஒன்று! ஆளுநரை பார்த்துவிட்டு போனதும்.. விஜய்க்கு வந்த சிக்கல்
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவியை நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின் நடந்த விஷயம் ஒன்றுதான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜயின் இந்த சந்திப்பே ஒரு புகார் காரணமாக ஏற்பட்டது என்று கூறுகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய்க்கு முக்கியமான ஒரு புகார் சென்றுள்ளதாம். விஜய் பொதுவாக பனையூர் பங்களாவை விட்டு வெளியே வருவதே இல்லை. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் இதுவரை பெஞ்சல் புயல் தொடர்பாக எந்த பேட்டியும் கொடுக்கவில்லை.. அதேபோல் நேரடியாக புயல் பாதித்த இடங்களை கூட பார்க்கவில்லை. ஏன் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை கூட விசிட் செய்யவில்லை.

முன்னதாக தவெக மாநாட்டில் நிர்வாகிகள் இறந்த போது அதற்கு விஜய் இரங்கல் அறிக்கையே தாமதமாக தந்தார். அவர்களின் குடும்பத்தாரை நேரில் கூட சென்று சந்திக்கவில்லை. அதேபோல் அவர்களுக்கும் கூட பனையூருக்கு அழைத்து நிவாரணம் கொடுத்தார். அவர்களையும் கூட நேரில் சென்று சந்திக்கவில்லை.
விஜய்க்கு சொல்லப்பட்ட அட்வைஸ்:
பனையூர் பங்களாவை தாண்டி வெளியே வாங்க அதுதான் முக்கியம். மக்களை அடிக்கடி சந்தியுங்கள். முக்கியமாக பத்திரிகையாளர்களை சந்தியுங்கள். உங்களின் நிலைப்பாடுகளை அறிவியுங்கள். இல்லையென்றால் மக்களிடம் சென்று சேருவது எளிதாக இருக்காது என்று விஜய்க்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சிலர்.. அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் தெரிவித்து உள்ளார்களாம்.
விஜய் எடுத்த முடிவு:
இதை சரி செய்யவே நேற்று முதல்முறையாக விஜய் அரசியல் ரீதியாக ஒரு விஷயத்திற்காக வெளியே வந்தார். தமிழக ஆளுநர் ஆர். என் ரவியை இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்தார். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தோம்.
எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும். அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து உள்ளோம். மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார். அவருக்கு எங்களின் நன்றி, என்று அறிக்கையில் கூறி உள்ளனர்.
இந்த சந்திப்பில் வேறு ஒரு முக்கிய விஷயத்தை விஜய் பேசி இருக்கிறாராம். அதன்படி அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு அரசியல் பின்னணி உள்ளது. அதை விசாரிக்க வேண்டும் என்று விஜய் கோரிக்கை வைத்துள்ளாராம்
சிக்கல்:
ஆளுநரை சந்தித்தால்.. நாம் வெளியே வரவில்லை என்று வைக்கப்படும் புகார்கள் குறையும் என்று நினைத்து விஜய் இப்படி செய்தார். ஆனால் இதுவே அவருக்கு சிக்கலாகவும் மாறி உள்ளது. ஆளுநரை சந்தித்த விஜய் செய்தியாளர்களை ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆளுநரை மட்டும் சந்தித்து செய்தியாளர்களை சந்திக்காமல் போனது எலைட் அரசியல் என்று விசிக கிண்டல் செய்வது தொடங்கி பல கட்சிகளும் விஜய் எப்போதுதான் தைரியமாக செய்தியாளர்களை சந்திப்பார்.. எப்போது ஸ்கிரிப்ட் இல்லாமல் நேரடியாக கேள்விகளுக்கு பதில் அளித்து பேசுவார் என்று கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications