விஜய் அரசியலுக்கு வர துடிப்பது ஏன்? பாமக உள் ஒதுக்கீடு நியாயமா? ஜெயரஞ்சன் காரசாரம்
சென்னை: திரைப்பட நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வர துடிக்கிறார்கள் என்பது பற்றி தமிழக அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார். கூடவே பெண்களை மையமாக வைத்துச் செயல்படுத்தப்படும் இலவசத் திட்டங்கள் பின்னால் உள்ள ஓட்டு அரசியல் பற்றியும் அவர் விரிவான ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்து அலசும் போது ஒரு புள்ளிவிவரம் கிடைத்துள்ளது. அதாவது ஒரு தொகுதியில் 300 வாக்குச் சாவடிகள் உள்ளது என வைத்துக்கொண்டால், அதில் 100 சாவடிகள் பெண்களுக்கானவை. அதில் பதிவான ஓட்டுகளில் கிட்டத்தட்ட 65% வரை திமுக கூட்டணிக்கு விழுந்துள்ளது.

அப்படி என்றால், கடந்த 3 ஆண்டுகளில் பெண்களை மையப்படுத்தி திமுக செயல்படுத்திய இலவசத் திட்டங்கள் இந்த வாக்குகளைப் பெற உதவி செய்திருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். ஆக, திமுக இந்த மாதிரியான ஒரு கணக்கை முன்கூட்டியே உணர்ந்துதான் பெண்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தியதா? என்ற சந்தேகம் இயல்பாக உருவாகிறது. இது குறித்து தமிழக அரசின் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் இது பற்றிய ஒரு விவாதத்தில் பேசும் போது, "பின் தங்கிய வகுப்பினர்களுக்குச் சமமான உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இடஒதுக்கீட்டை அரசு கொண்டுவந்தது. அப்படிப் பார்த்தால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இடஒதுக்கீடு என்பது இங்கே நடைமுறையில் இருக்கிறது. அப்படிக் கொடுக்கப்பட்டும் கூட சிலரால் இன்னும் உரிய உரிமையைப் பெற முடியவில்லை. அது பல்வேறு காரணங்களால் போய்ச் சேராமல் இருக்கிறது.
அப்படிப் பார்த்தால் இடஒதுக்கீடு பற்றிய மறுபரிசீலனை செய்து, அதில் பின் தங்கி உள்ளவர்களை வேறு வழிகளில் மேலே உயர்த்திவிட முயற்சி செய்கிறோம். அதற்குப் பெயர்தான் திராவிட மாடல் என்கிறோம். அதைப் பலர் சரியாகப் புரிந்து கொண்டது போல் தெரியவில்லை.
உதாரணமாகச் சொன்னால், இஸ்லாமியர்கள். அவர்கள் இடஒதுக்கீடு என்று கொடுத்தும் கூட அதிக அளவில் பலனடையவில்லை. அதை உணர்ந்துதான் 3.5% உள் ஒதுக்கீடு கொடுக்கிறோம். அருந்ததியர் கூட அப்படித்தான். இந்தப் போட்டியில் அவர்களால் உரிய உரிமையைப் பெற முடியவில்லை. இந்த உள் ஒதுக்கீடு பற்றி ஒரு சர்வே செய்துள்ளார்கள். இது மட்டும் இல்லை என்றால், இப்போது இந்த உள் ஒதுக்கீடு மூலம் யார் எல்லாம் பலன் பெறுகிறார்களோ அவர்கள் யாரும் பலனடைந்திருக்க முடியாது என்கிறது அந்த டேட்டா.

அதைப் போன்றுதான் பெண்கள் முன்னேற்றம். அதற்காகத்தான் அரசு ஒவ்வொரு திட்டத்திலும் ஒரு வரம்பை நிர்ணயிக்கிறது. திருமணத்திற்கு உதவி திட்டம் என வரும்போது 8 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என ஒரு விதியை சேர்க்கிறோம். அடுத்த பள்ளிப்படிப்பை முடித்திருக்க வேண்டும் என மாற்றுகிறோம். அதன்பின்னர் உயர்கல்வி சேர்ந்தால் ஊக்கத்தொகை என்று சொல்கிறோம்.
இதன் மூலம் பெண்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அவர்கள் இதுவரை வேலையே செய்யவில்லை என்பது இதன் பொருள் அல்ல. வேலை என்ற விதிக்குள் அவர்கள் இல்லை. அதை மனதில் கொண்டுதான் இத்திட்டத்தை வகுக்கிறோம். அதைச் சிலர் ஓட்டு அரசியலுடன் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். அது தவறு.
சமீபத்தில் லண்டன் சென்று வந்ததேன். அங்கே கூட பள்ளிகளில் குழந்தைகளுக்கு உணவளிப்பது பற்றி இப்போது ஆலோசித்து வருகிறது அரசு. அங்கே நிலவும் விலைவாசி உயர்வால் பிள்ளைகள் சரியான உணவு கிடைக்காத சூழல் உண்டாகியுள்ளது. அங்கேயும் வறுமை உள்ளது. ஆகவே, இதைப் பற்றி யோசிக்கிறது அரசு. இங்கே அப்படியல்ல. பலரும் வறுமையில்தான் இருக்கிறார்கள். அதை மாற்றவே இந்த மாதிரியான திட்டங்களைச் செய்கிறோம். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் தருவது ஓட்டு வாங்குவதற்காக அல்ல. அவர்கள் வெளியே சென்று வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக.
இங்கே அரசியல் என்பது அதிகாரம். அதை கைப்பற்றுவதன் மூலம் அதிகாரத்தில் பங்கேற்கலாம். ஆகவேதான், பலரும் அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு பஞ்சாயத்து தலைவர் அல்லது வார்டு உறுப்பினர் பதவியில்கூட அதிகாரம் உள்ளது. ஒரு இடத்தில் அதிகாரம் கிடைக்காது என உணரும்போது அரசியலுக்கு வருகிறார்கள். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதும் அதிகாரத்திற்காகத்தான்.
இந்த அதிகார ஆசை எல்லோருக்கும் உள்ளது. ஆனால், அரசியலில் அதிகார பதவி என்பது குறைவாகவே இருக்கிறது. அந்தக் குறைந்த இடத்தைப் பிடிக்கப் பலமான போட்டி நடக்கிறது. அரசியல் அதிகாரத்தைப் பிடிக்க விரும்புகிறவர்கள் அனைவரும் நாகரிகமாகப் பேசுவார்கள் எனச் சொல்ல முடியாது. விமர்சனம் என்பதை மிகக் கொச்சையாகவும் முன்வைப்பார்கள். அதை நீங்கள் தடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications