Jana Nayagan: ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது ஏன்? தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம்
சென்னை: ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்காதது ஏன் என்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் விளக்கமளித்துள்ளனர். மேலும் சல்லியர் படத்தை வெளியிட பிவிஆர் திரையரங்கம் மறுத்தது குறித்தும் அவர்கள் பேசியுள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து போது கூறியதாவது: தணிக்கை குழு என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தணிக்கை குழு நிறைய விதிகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதனால் எங்களுக்கு நிறைய சிரமங்கள் உள்ளன.

பான் இந்தியா படங்களை அனைத்து மொழிகளிலும் சென்சார் செய்வதாக அறிவித்துள்ளார்கள். ஒரு சட்டத்தை கொண்டு வரும் போது ஆரம்பத்தில் சிரமப்பட வேண்டிய சூழல் உள்ளது. இது தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பிரச்சினை கிடையாது, இயக்குநர்களுக்கு நேரத்திற்கு முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
படங்களுக்கான புக்கிங் என்பது படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே ஓபன் செய்ய வேண்டிய நிலை உள்ளது. தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே புக்கிங் செய்ய முடியும். வெளிநாடுகளில் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் 21 நாட்களுக்கு முன்பே படங்களுக்கு சென்சார் சான்றிதழ் பெற வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு நாடுக்கும் ஒவ்வொரு சட்டத்திட்டம் இருக்கிறது. அதனால் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் படங்களை வேகமாக முடித்து சென்சாருக்கு அனுப்ப கேட்கிறோம். ஒரு படம் என்றால் அதில் வரும் காட்சிகள் எந்தளவுக்கு சமுதாயத்தை பாதிக்கும் என்பதை பார்த்துதான் தணிக்கை சான்றிதழ் கொடுக்கிறார்கள்.
அப்படி ஏதாவது பிரச்சினை வரும் நிலையில் அதை நிறுத்தி வைக்கிறார்கள். இதனால் 100 சதவீதம் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு உள்ளது. இயக்குநர்களும் தயாரிப்பாளர்களுக்கான பாதிப்பை கருத்தில் கொண்டு அதை சரி செய்ய வேண்டும்.
ஜனநாயகனை பொருத்தமட்டில் தணிக்கை குழு அறிவுறுத்திய காட்சிகள் மாற்றப்பட்டும் ஏன் தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படவில்லை என்பதற்கான காரணத்தை தெரியாமல் நாங்கள் சொல்லக் கூடாது. ஆனால் இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய பாதிப்பு என்பதை மட்டும் நாங்கள் சொல்கிறோம்.
சினிமா துறைக்கே பிரச்சினை என்றால் மட்டுமே எங்கள் சங்கம் சார்பாக நாங்கள் பேசுவோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட படத்திற்கான பிரச்சினை குறித்து நாங்கள் பேச முடியாது. தமிழகத்தில் பிவிஆரை தவிர வேறு தியேட்டர்களே இல்லையா, சல்லியர் படத்தை ரிலீஸ் செய்ய!
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் உள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கிய 'ஜனநாயகன்' திரைப்படம், திட்டமிட்டபடி நாளை வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் தாமதமானதால், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிமன்றம், 'ஜனநாயகன்' படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் குறித்த வழக்கில் வரும் 9 ஆம் தேதி (நாளை) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது.
நீதிபதி பி.டி. ஆஷா முன்பு இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி, படத்திற்கு எதிரான புகார் மனு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தணிக்கை வாரியம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
தணிக்கை வாரியத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், "'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு எதிராக தணிக்கைக் குழு உறுப்பினர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே, படம் மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது" என்று வாதிட்டார்.
இதற்கு நீதிபதி, "முதலில் படத்தை ஆய்வு செய்த குழுவில் இருந்த ஒரு உறுப்பினர், தனது கருத்து ஏற்கப்படவில்லை என்பதற்காக, சர்ச்சைக்குரிய காட்சி இடம்பெற்றிருப்பதாக புகார் அளிப்பது எப்படி? இந்த புகார் ஏற்கத்தக்கதா? இந்த செயல்பாடு வினோதமாகத் தோன்றுகிறது" என்று கேள்வி எழுப்பினார்.
தணிக்கை வாரியத் தரப்பில், "படம் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்களின் பரிந்துரை திருப்தியளிக்கவில்லை எனில், மறுஆய்வுக் குழுவுக்கு படத்தை அனுப்ப தணிக்கை வாரியத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது" என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் விளக்கமளித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "'ஜனநாயகன்' படத்தில் பாதுகாப்புப் படைகளின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அதுகுறித்து நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டியுள்ளது. தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்போ அல்லது மறுஆய்வுக்குப் பரிந்துரைக்கும்போதோ, மனுதாரர் நீதிமன்றத்தை அணுக முடியாது."
"அனைத்து நடவடிக்கைகளும் சட்ட விதிமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மறுஆய்வுக் குழுவுக்குப் பரிந்துரைத்த தகவல் மனுதாரருக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தணிக்கை வாரியத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்த இயலாது. மத்திய அரசு அல்ல, தணிக்கை வாரியமே இந்த முடிவை எடுத்தது. சான்றிதழ் வழங்கும் வரை மறுஆய்வு செய்ய தணிக்கை வாரியத்திற்கு முழு அதிகாரம் உண்டு" என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், "படத்தை முதலில் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ஒருமனதாக சான்றளிக்க முடிவெடுத்த பின்னர், அதில் ஒரு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மறுஆய்வுக்கு அனுப்பியதில் உள்நோக்கம் உள்ளது" என்று குற்றம்சாட்டினார்.
மேலும், "படத்தை ஆய்வு செய்த உறுப்பினர்கள் பரிந்துரை மட்டுமே வழங்க முடியுமே தவிர, புகார் அளிக்க முடியாது. தணிக்கை வாரியம் ஒருமுறை எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய இயலாது. ஒரு தணிக்கை வாரிய உறுப்பினரே புகார் அளித்த விஷயம் இப்போதே எங்களுக்குத் தெரியவந்தது ஆச்சரியமளிக்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் சதீஷ் பராசரன் தனது வாதத்தில் வலியுறுத்தினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், ''ஜனநாயகன்' திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தீர்ப்பை இன்றே அல்லது விரைந்து வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு நீதிபதி, "உயர் நீதிமன்றத்தை நிர்பந்தம் செய்வதற்குப் பதிலாக, தணிக்கை வாரியத்தை நிர்பந்தம் செய்யுங்கள்" என்று பதிலளித்தார். இருப்பினும், நாளை தீர்ப்பு வழங்க முயற்சிப்பதாக நீதிபதி குறிப்பிட்டார்.
தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால், 'ஜனநாயகன்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications