காங்கிரஸ் என்றால் கப்சிப்.. பாஜக என்றால் அமைதியோ அமைதி.. கமல் பிரச்சாரத்தில் இதை கவனிச்சீங்களா?
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசிய கட்சிகளை விமர்சிக்காமல் மாநில கட்சிகளை மட்டும் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசிய கட்சிகளை விமர்சிக்காமல் மாநில கட்சிகளை மட்டும் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தின் தேர்தல் பரபரப்பு இன்றோடு முடிகிறது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையோடு முடிகிறது. இந்த லோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிரமாக தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிப்படை வசதிகள்.. தேனியில் தேர்தலை புறக்கணித்து ஊரை காலி செய்ய கிராம மக்கள் முடிவு
கமல்ஹாசன் பிரச்சாரம்
லோக்சபா தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்து வருகிறார். அனைத்து தொகுதிகளிலும் ஒற்றை ஆளாக இவர் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
திமுக
பிரச்சாரத்தில் கமல்ஹாசன் அதிகம் விமர்சனம் செய்த கட்சி என்றால் அது திமுகதான். ஆட்சியில் இருக்கும் அதிமுகவை விட கமல்ஹாசன் அதிகமாக திமுகவைதான் விமர்சனம் செய்தார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினின் பெயரை அவர் பெரும்பாலான இடங்களில் வெளிப்படையாக குறிப்பிடவே இல்லை. திமுகவின் வாரிசு அரசியலை அதிகம் கிண்டல் செய்தார்.
அதிமுக எப்படி
அதேபோல் அதிமுக குறித்தும் பேசினார். ஊழல்கள் குறித்தும், அடிமைத்தனம் என்று கூறியும் மிக மிக அதிக அளவில் பேசினார். முக்கியமாக முதல்வர், துணை முதல்வர் இருவரையும் விமர்சனம் செய்தார். இடையில் சசிகலாவையும் அவ்வப்போது விமர்சனம் செய்தார். ஆனால் பெரிய அளவில் டிடிவி தினகரனை விமர்சனம் செய்யவில்லை.
தேசிய கட்சிகள்
ஆனால் கமல்ஹாசன் பெரிய அளவில் தேசிய கட்சிகளை இந்த பிரச்சாரத்தில் விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் குறித்தும், பாஜக குறித்தும் அவர் பெரிய அளவில் விமர்சனம் செய்து பேசவில்லை. நடப்பது லோக்சபா தேர்தலாக இருந்தாலும் கூட தேசிய கட்சிகளை விமர்சிப்பதில் மென்மையான போக்கையே கமல்ஹாசன் கடைப்பிடித்து வந்தார்.
சில இடங்கள்
மோடி காவலாளி என்று கூறுவதை சில இடங்களில் விமர்சனம் செய்தார். அதேபோல், ராகுல் காந்தி இரண்டு இடங்களில் போட்டியிடுவதையும் கிண்டல் செய்தார். ஆனால் எங்குமே இரண்டு கட்சிகளையும் இவர் பெரிய அளவில் கடுமையாக விமர்சனம் செய்யவில்லை என்பதே உண்மை.
பல கேள்விகள்
கமல்ஹாசனின் இந்த பிரச்சார யுக்தி பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு பின் கூட்டணிக்காகக் அவர் தேசிய கட்சிகளை விமர்சிக்காமல் இருக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் எதிர்கால நன்மை கருதியும், எதிர்காலத்தில் தேர்தல் கூட்டணிகளை உருவாக்க திட்டமிட்டும் அவர் இப்படி செயல்படுகிறாரா என்றும் கேள்வி எழுந்து உள்ளது.
என்ன கூறினார்
ஏற்கனவே தேர்தலுக்கு பின் பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுடன் கூட்டணி வைக்க எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் அரசியல் போக்கை மாற்ற வேண்டும். தமிழக பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் எங்களை அவர்களிடம் விற்க போவதில்லை. தமிழக நலனுக்காக மட்டுமே இணைய போகிறோம், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார்.
இதுதான் காரணம்
இப்படி கூட்டணி கணக்குகளை மையமாக வைத்துதான் கமல்ஹாசன் இப்படி பேசுகிறார் என்று கூறுகிறார்கள். அதே சமயம் கமல்ஹாசனுக்கு தேசிய அரசியலை விட மாநில அரசியல் மீதுதான் கோபம் அதிகம் என்பதால் அது குறித்தே அதிகம் பேசுகிறார். வேறு எந்த காரணமும் இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.