விருதிலும் அரசியலா... "ராட்சச கலைஞன்".. ரஜினியைவிட கமல்ஹாசனுக்கு என்ன குறைச்சல்?
கமல்ஹாசனுக்கு விருது ஏன் வழங்கப்படவில்லை என விளங்கவில்லை
சென்னை: ரஜினிகாந்த்துக்கு விருது கிடைப்பதில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்... ஆனாலும் ரஜினியைவிட அப்படி எதில் குறைந்துபோய்விட்டார் ராட்சச கலைஞன் கமல்ஹாசன்?! என்ற கேள்வியும் பின்னாடியே கிளம்பி வருகிறது.
ரஜினிகாந்த்துக்கு இன்று மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.. உச்சநட்சத்திரம் என்ற அந்தஸ்தை இன்றுவரை தோளில் சுமந்து கொண்டிருப்பவர்.. லட்சக்கணக்கான ரசிகர்களை வயது வித்தியாசம் பாராமல் இப்போதுவரை தக்க வைத்து வருபவர்.. இத்தனை சிறப்புக்களை பெற்ற ரஜினிக்கு மத்திய அரசு விருது வழங்கி உள்ளது வரவேற்கத்தக்கதே!
ஆனால், மூத்தவரான கமலுக்கு என்ன குறைச்சல்?
ரஜினி மற்றும் கமலை ஒப்பிட்டு பேசுவது சரியா என்று கேட்கலாம்.. தமிழ் சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்க வைத்த கலைஞன் என்றால் அதில் முதலில் வருவது கமல்தான்.. தமிழ் சினிமாவுக்கு அகில இந்திய அளவில் பல விருதுகளையும், பெருமைகளையும், கெளரவத்தையும் தேடிக் கொடுத்தவர் கமல்தான். ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட தமிழ்ப் படங்களை வரிசைப்படுத்தினால் கமல் படங்கள்தான் முன்னாடி வந்து நிற்கும்.

பரிமாணங்கள்
என்னதான் சூப்பர் ஸ்டார் என்றாலும் நடிப்பு என்ற வட்டத்தை தாண்டி அவரால் வெளியே வரமுடியவில்லை.. ஆனால், கமல்ஹாசனை குழந்தையில் இருந்து தூக்கி வளர்த்தது இந்த தமிழ்நாடு.. நடிகர், டான்ஸ் மாஸ்டர் வசனம், பாடல்கள், டைரக்டர், என பல பரிமாணங்களை தொட்டார்... இப்போது அரசியலில் முழுவதுமாக தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார்.

தொழில்நுட்பம்
தான் இருக்கும் துறையில், வளர்ந்தவர்கள், வெற்றி பெற்றவர்கள் என எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.. ஆனால், தன் துறையில் தானும் வளர்ந்து, தன்னுடைய துறையையும் வளர்ச்சிக்கு கொண்டுவந்தவர்கள் வெகு சிலரே.. அதில் தவிர்க்க முடியாதவர் கமல்ஹாசன் என்னும் ராட்சச கலைஞன். பல தொழில்நுட்பங்களை இன்று தமிழ் சினிமா அனுபவிக்கிறது என்றால் அதற்கு விதை போட்டவர் கமல்ஹாசன்தான்.

நிஜவரலாறு
இது அத்தனையும் இந்த நாடே அறிந்த உண்மை.. இந்தியாவே கண்கூடாக பார்த்து வரும் நிஜவரலாறு.. எனினும், கமலை மத்திய அரசு அரசியல் நோக்கத்துடன் அணுகுகிறதோ, விருது விஷயத்தில் பாஜகவின் கணக்குகள் ஏதாவது பின்னி பிணைந்துள்ளதோ என்ற சந்தேகமும் இன்று ஏற்பட்டுள்ளது.. சில மாதங்களுக்கு முன்பு, இந்திய சினிமாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது, ரஜினிக்கு அறிவிக்கப்பட்டது.. இந்த விருது அப்போது பெரிதும் சலசலக்கப்பட்டது.. காரணம், ரஜினியை அரசியலுக்கு மிக தீவிரமாக அழைத்து கொண்டிருந்த காலகட்டம் அது..

பொன்.ராதா
இந்த விருது அறிவிக்கப்பட்டதும், உடனடியாக கிளம்பி சென்று ரஜினியை சந்தித்து வாழ்த்து சொன்னவர் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.. பொன்.ராதா ரஜினியை சந்தித்தபோதே, விருது அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியது... அதுபோலவே, இப்போதும் இன்றைய தினம் ரஜினிக்கு தருவதாக அறிவித்துள்ள தாதா சாஹேப் விருது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

திரையுலகம்
இந்த விருதை அத்தனை சீக்கிரம் தமிழக கலைஞர்களுக்கு இதுவரை மத்திய அரசு தந்தது இல்லை. சிவாஜி கணேசனுக்கு இந்த விருது கொடுக்க வேண்டும் என்று போராடாத குறையாக தமிழ்த்திரையுலகம் ஒரு காலம் கதறித் துடித்தது.. கடைசி வரை இழுத்தடித்துத்தான் அந்த விருதை சிவாஜிக்குக் கடைசிக்காலத்தில் கொடுத்தார்கள் என்பதை மறந்து விட முடியாது.

விருதுகள்
இன்று ரஜினிக்கு வெகு சுலபமாக விருதுகள் வருவதைப்பார்க்கும்போது, அவரது ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்க, கடைசி அஸ்திரமாக இந்த விருதினை பாஜக பயன்படுத்தி கொள்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது... இங்குதான் கமலின் அரசியல் வளர்ச்சியையும் பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் வானதி வெற்றி பெறுவதற்கான சூழல்கள் குறைந்து கொண்டு போகிறது..

வீரியம்
கமலின் வீரியம் அங்கு அதிகரித்து கொண்டு வருகிறது.. மநீம நிர்வாகியிடம் ரெய்டு நடத்தியபோதே மய்யத்தை பாஜக லேசாக அசைத்து மிரட்டியதாக கூறப்பட்டு வரும் நிலையில், கமலின் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியாலேயே கமலுக்கு இந்த விருது வழங்கப்படவில்லையா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் திறமையின் அடிப்படையில் பார்த்தாலும் சரி, கமலுக்குதான் இந்த விருது முழு பொருத்தம்.. முழு தகுதிக்குரியது.. இதை இல்லை என்பதை இந்த இந்தியாவே மறுக்காது..!

வெளிச்சம்
கமல் வாங்காத கைதட்டல் இல்லை.. கமல் செல்லாத உச்சம் இல்லை.. கமல் பார்க்காத விருதும் இல்லை.. அவர் இதுவரை எத்தனை மேடைகளில் எத்தனை எத்தனை விருதுகளை பெற்றார் என்பதை எண்ணி பார்க்கவே நாட்கள் பிடிக்கும்.. எனக்கு விருதே வேண்டாம்.. போதும்.. மற்றவர்களுக்குக் கொடுங்கள் என்று சொன்னவர் கமல். அவரின் படங்களை அவற்றில் பொதிந்துள்ள ஆச்சர்யங்களை விவரிக்கவே காலம் பிடிக்கும்.. மத்திய அரசின் விருது விவகாரங்களில், எந்த அரசியல் காய்நகர்த்தலாக இருந்தாலும் சரி, கமல்மீதான வெளிச்சம் பிரகாசமாக காலத்துக்கும் ஒளிர்ந்து கொண்டே தானிருக்கும்..!












Click it and Unblock the Notifications