என்ன செய்கின்றன அரசியல் கட்சிகள்.. சாதி வெறிக்கு பலியான ராஜலட்சுமியை கண்டுகொள்ளாதது ஏன்?
ராஜலட்சுமி படுகொலையில் அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன?
Recommended Video
சென்னை: 13 வயது சிறுமியின் தலையை சாதி வெறி பிடித்த மிருகம் ஒன்று வெட்டி சாய்த்து ஒரு வாரம் ஆகிறது... ஆனால் இது சம்பந்தமாக நமது கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்றே புரியவில்லை.
ஆத்தூர் அருகே தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியிடம் அதே பகுதியில் வசித்து வந்த தினேஷ் குமார் என்ற கொடூரன் தன் பாலியல் சீண்டல்களை தீண்ட ஆரம்பித்திருக்கிறார். இதை வெளியில் சொன்னால் கொன்னே போட்டுடுவேன் என்று மிரட்டி மிரட்டியே அடுத்தடுத்த வன்மத்தை அரங்கேற்றி வந்துள்ளான்.
[ராஜலட்சுமி கொலைக்கு ஸ்டாலின் தாமத கண்டனம்.. உரிமையோடு கோபப்படுகிறோம்.. நெட்டிசன்கள் வருத்தம் ]
வெட்டி சாய்த்த மிருகம்
தன்னால் ஒரு கட்டத்துக்கு மேல் தாங்கி கொள்ள முடியாத அந்த பிஞ்சு, இதை போய் தன் பெற்றோரிடம் சொல்ல, அதற்கு அவர்களோ, இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று பெரிதுபடுத்தாமல் விட்டிருக்கிறார்கள். விளைவு.. தண்ணியை அடித்துவிட்டு, சாதிய வார்த்தைகளை கூறி அரிவாளை கொண்டே அந்த பிஞ்சுவின் தலையை வெட்டி வீழ்த்தியுள்ளது அந்த மிருகம்!!
சதை பிண்டங்களா?
மீ டூ பற்றி அதிகமாக பேசப்பட்டு வரும் சமயத்தில் இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் படுகொலை நடந்தது ஆச்சரியமாக உள்ளது. சாதி வெறியர்கள் மீ டு படுகொலையை இதுபோன்ற கிராமங்களில் அதிகமாகவே நடத்தி வருகிறார்கள். இது வெளியில் தெரியாமலேயே முடங்கி போய்விடுகிறது. தமிழ் சமூகத்தில் பச்சிளம் பிள்ளைகளுக்கு எதிராக நடந்தேறும் பாலியல் வன்புணர்வு சம்பவங்களும், சாதிய படுகொலைகளும் இன்னும் தீர்ந்த பாடில்லை. பெண்களை தங்கள் இச்சைகள் தீர்ப்பதற்காகவே படைக்கப்பட்ட ஜீவன்கள் என நினைத்து ஆணாதிக்க கொடூரங்கள், தங்களின் குற்றங்களின் வடிவங்களையும், எண்ணிக்கைகளையும் உயர்த்தி கொண்டே போகிறார்கள்.
கொல்லும்போதும் சாதி
தன் மகளை ஒருவன் நாசமாக்கிவிட்டான் என்று தெரிந்தும் அந்த தாயால் தன் எதிர்வினையை காட்டாததற்கு என்ன காரணம்? 13 வயது சிறுமி தன்னிடம் ஒருவர் தவறான நோக்கத்துடன் தொட முயற்சி செய்யும்போதே அதற்கு எதிர்ப்பு காட்டாமல், தொடர்ந்து அந்த நபரை தவறு செய்ய அனுமதிக்க என்ன காரணம்? 13 வயது சிறுமியை வெறுமனே கொல்லாமல் சாதியை சொல்லி சொல்லி திட்டி திட்டி தலையை சீவி எடுக்க என்ன காரணம்?
வெறுப்பு பிரச்சாரங்கள்
எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் தமிழக தலைவர்களின் வெறுப்பு பிரச்சாரங்கள்தான்!! வெறுப்பு பிரச்சாரங்களை விட்டொழிக்க கடுமையான நடவடிக்கையை இனியாவது அரசு மேற்கொள்ள வேண்டும். அதேபோல, இதுபோன்ற குற்றங்களுக்கு சட்டங்களை கடுமையாக்கவும் வேண்டும். சாதிய ரீதியான படுகொலை செய்தோரை எந்த சிறு துளை வழியாககூட அதிமுக அரசு தப்பிக்க விட்டு விடக்கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்புமாக உள்ளது.
ஆத்தூருக்கு ஏன் போகவில்லை?
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்து கொள்ள தெரிந்த ஸ்டாலின், ஏன் ஆத்தூர் பக்கம் போய் அந்த குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை என்று கேள்வி கணைகள் இணையத்தை கலங்கடிக்க தொடங்கியது. இந்த குருபூஜையில் கலந்து கொள்ளாவிட்டால் அந்த சமூக ஓட்டுகளை இழக்க நேரிடும் என்ற அச்சம் ஏற்பட்டுவிட்டதா எனவும் ஸ்டாலினுக்கு எதிராக கேள்விகள் எழுந்தன.
|
இதுதான் லட்சணமா?
இந்த நிலையில் இவ்வளவு கண்டனங்கள் குவிந்த பிறகு ஸ்டாலின் இந்த விஷயத்தில் ஸ்டாலின் ஒரு வழியாக வாயை திறந்துள்ளார். தனது ட்விட்டரில், "பாலியல் வன்கொடுமை செய்து, தலையை துண்டித்த அரக்கனை குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல், மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது. முதலமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? இரும்புக்கரத்தால் அடக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
ஏன் பங்கெடுக்கவில்லை?
சாதிய வெறியோடு நடத்தப்பட்ட இந்த படுகொலைக்கு சமூகவலைதளங்கள் உட்பட சாதாரண மக்களும் வெடித்து எழ தொடங்கிவிட்டார்கள். ஆனால் பிரதான கட்சிகள் என்று சொல்லும் எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு நாள் வாயை திறக்கவில்லை என தெரியவில்லை. பிள்ளையை பறிகொடுத்த அந்த பெற்றோரின் வேதனையிலும், கண்ணீரிலும் எந்த விதத்தில் பங்கெடுத்து கொள்ளாதது ஏன் என்றும் தெரியவில்லை. சமூக நீதியை போற்றி பாதுகாக்கும் கட்சியாக தன்னை எப்போதுமே சொல்லி கொள்ளும் திமுக சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆன நிலையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளது வருந்தத்தக்கதே.
சுணக்கம் காட்டுவதா?
மக்களின் பிரச்சனைகளை விரைவாக அணுகுவதிலும், அவர்களின் உணர்வுகளை உள்வாங்குவதிலும், அவர்களின் இன்னல்-இழப்புகளுக்கு பக்கபலமாக தோள் கொடுத்து உயர்த்துவதிலும்தானே ஒரு கட்சியின் வலுவே அடங்கி உள்ளது என்பதை இன்னும் எதிர்க்கட்சிகள் உணராமல் உள்ளதோ??? எந்தக் கட்சியுமே இதில் எந்த வித சுணக்கத்தையும் காட்டக் கூடாது. சமூக அக்கறையுடன் கூடிய அரசியல் கட்சிகளாக இவை செயல்பட்டாக வேண்டிய கட்டாயமும், காலமும் தற்போது வந்து விட்டது. இல்லாவிட்டால் இத்தகைய கட்சிகள் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டு விடும்.