செந்தில் பாலாஜிக்கு 3 நாட்கள் மட்டும் காவல் நீட்டிப்பு ஏன்? அமலாக்கத்துறை வழக்கறிஞர் சொன்ன தகவல்!
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு 3 நாட்கள் மட்டும் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது ஏன் என அமலாக்கத்துறை வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் வாங்கிய பணத்தை சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சரியானது தான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்றுடன் நிறைவடையவுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீட்டித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் காணொளிக்காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 28ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டு, அவரது நீதிமன்றக் காவலை 28ஆம் தேதி வரை அதாவது மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை 3 நாட்கள் மட்டும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் அளித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், அமலாக்கத்துறை காவல் முடித்து, 12ஆம் தேதி செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, அவருடைய நீதிமன்ற காவல் 14 நாட்களுக்கு, அதாவது ஆகஸ்ட் 25 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை கோப்பிற்கு எடுக்கப்பட்டு, வழக்கு எண்ணிடப்பட்டு, வாய்தா தேதி ஆகஸ்ட் 28 என நிர்ணயிக்கப்பட்டது.
வழக்கின் வாய்தா தேதி ஆகஸ்ட் 28 என்பதால், தற்போது, நீதிமன்ற காவல் 3 நாள் மட்டும் நீட்டிக்கப்பட்டது. ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று வழக்கின் நகல்கள், குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்படும். விசாரணை தொடங்குவதற்கு முன் இன்னும் சில நடைமுறைகள் உள்ளன. கைது செய்யப்பட்டவர் ஜாமீனில் விடுவிக்கப்படும் வரை, நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்படும் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications