உபியில் திருவள்ளுவர் சிலை.. தடுக்கும் பாஜக! அப்ப காசி-தமிழ் சங்கமம்? பாயிண்டை பிடித்த செந்தில்குமார்
சென்னை: காசி தமிழ் சங்கமம் நடத்தும் பாஜக அரசே 6 ஆண்டுகளாக உத்தரபிரதேச மாநிலத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க தடையாக இருப்பது ஏன்? என்று தருமபுரி தொகுதி திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தமிழ்நாடு மற்றும் காசி இடையே உள்ள பண்டைய பண்பாட்டு நாகரீக தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
ஐஐடி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த நவம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

ஏன் இந்த சங்கமம்?
இதில் பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளின் 13 மொழி பெயர்ப்புகளை வெளியிட்டார். இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்தியா சுதந்திரம் பெற்று 75 வது ஆண்டை அடைந்து இருப்பதை அமிர்த பெருவிழாவாக மத்திய அரசு கொண்டாடி வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பண்பாட்டு தொடர்பு
இந்தியாவில் உள்ள பண்டைய நகரங்களின் நாகரீங்கங்கள், பன்பாடு, கலாச்சாரம், பன்முகத் தன்மை குறித்து கல்வி சார்ந்த உரையாடல்கள், கருத்தரங்குகள் மற்றும் விவாதங்களை நடத்த இந்த காசி தமிழ் சங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக தமிழ்நாட்டில் இருந்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசிரியர்கள், மாணவர்கள், ஆன்மீகவாதிகள், விவசாயிகள் என பலர் சென்று வருகின்றனர்.

எதிர்ப்புகள்
இந்த சூழலில் மதபிரச்சார நிகழ்ச்சியை போன்று இந்த காசி தமிழ் சங்கமம் இருப்பதாகவும், இது தமிழ் வழியில் சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி என்றும் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டு வருவதாக திமுக, விடுதலை சிறுத்தைகள், திராவிட இயக்கங்கள், இடதுசாரி அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

திருவள்ளுவர் சிலை
இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் நகரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க 32 ஆண்டுகளாக முயற்சித்து வருவோரின் கோரிக்கையை பாஜக அரசு ஏற்குமா? என்ற கேள்வி எழுப்பி வருகிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். கங்கா, யமுனா ஆகிய நதிகளுக்கு அருகே தமிழர்கள் அதிகம் நீராடும் திரிவேணி சங்கமம் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது.

திருவள்ளுவர் சாலை
பாஷா என்ற அமைப்பு இதற்கான முயற்சிகளில் 1990 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில், திரிவேணி சங்கமம் அருகே உள்ள சாலைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பெயர் சூட்ட மாநகராட்சி அனுமதியளித்தது. ஆனால், நீதிமன்ற தடையை காரணம் காட்டி சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.

கருணாநிதி கோரிக்கை
திருவள்ளுவருக்கு சிலை வைப்பது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் கோரிக்கை விடுத்து இருந்தார். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் கோரிக்கை மனு அளித்து உள்ளதாகவும், உபி முதலமைச்சர் ஆதித்யநாத்தை சந்திக்க அனுமதிகோரி 6 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்படுவதாக பாஷா அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.

திமுக எம்பி செந்தில் குமார்
இது தொடர்பாக வெளியான நாளிதழ் செய்தியை ட்விட்டரில் பதிவிட்டு உள்ள திமுக எம்பி செந்தில் குமார், "நரேந்திர மோடியின் பாஜக அரசு ஏன் உத்தரப்பிரதேசத்தில் திருவள்ளுவர் சிலையை அமைக்க விடாமல் முடக்கி வருகிறது? காசி தமிழ் சங்கமம் நடத்தும் பாஜக அரசே! 6 ஆண்டுகளாக உத்தரபிரதேச மாநிலத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க தடையாக இருப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications