நடவடிக்கை எடுக்க முடியலையா.. வேலையை விட்ருங்க.. கட்சியில் சேர்ந்துடுங்க.. ஹைகோர்ட் சுளீர்
சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை: விதிமீறல் பேனர்கள் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேர வேண்டியது தானே என ஐகோர்ட் நீதிபதிகள் அதிகாரிகளை சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.
தமிழகத்தில் அரசியல் கட்சியினர் சாலையோரங்களில் விதிகளை மீறி பேனர்கள் வைக்கிறார்கள் என்றும், அப்படி பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் பேனர்கள் வைப்பது குறையாமலே இருந்ததால், அடுத்தடுத்து நிறைய மனுக்களை இது தொடர்பாகவே தாக்கல் செய்து வந்தார்.

விளக்கம்
இதுகுறித்து இன்று நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, கட்சி பேனர்கள் அகற்றப்பட்டது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர்.

மதிப்பதே இல்லை
ஆனால் அதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. 5 ஆண்டுகளாக பேனர்களை எடுக்க சொல்லி உத்தரவிட்டும், அதிகாரிகள் மதிப்பதே இல்லை என்று காட்டமாக கூறியதுடன், இதுவரை பேனர்கள் வைத்தவர்கள் மீது என்னதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதை பற்றின விவரங்கள் எதுவும் இல்லையே என்றும் தெரிவித்தனர்.

ராஜினாமா
மேலும் விதிகளை மீறி பேனர்கள் வைப்பவர்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? அப்படி நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, விருப்பமான கட்சியில் சேர வேண்டியது தானே என்றும் நீதிபதிகள் கூறினர்.

ஒத்தி வைப்பு
பேனர்கள் அகற்றுவது சம்பந்தமாக 5 வருஷமாக அரசு சொல்லும் காரணங்களை கேட்டு சோர்வே அடைந்துவிட்டோம் என்று தெரிவித்த நீதிபதிகள் இதுபற்றி விரிவான விளக்கம் அடங்கிய அறிக்கையை நாளை தாக்கல் செய்யும்படிஅரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கையும் நாளைக்கு ஒத்தி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications