ஆசிரியர்கள் நியமனத்தின் போது அவர்களின் குற்றப் பின்னணியை போலீஸ் மூலம் விசாரிக்கலாமே? ஐகோர்ட் யோசனை!
சென்னை: ஆசிரியர்கள் நியமனத்தின் போது, அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் காவல்துறையினர் மூலம் விசாரிக்க கூடாது? என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், இது சம்பந்தமாக அரசு முடிவு எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தகுதி தேர்வுடன் போட்டித் தேர்வு மூலமும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என, 2018 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
விசாரணையின் போது, ஆசிரியர்களுக்கு எதிரான வழக்குகள் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆசிரியர்கள் நியமனத்தின் போது அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் சரிபார்க்க கூடாது? இது குறித்து அரசு ஏன் ஒரு முடிவை எடுக்கக் கூடாது? என அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களிடம் அவர்களின் குற்ற பின்னணி குறித்த விவரங்கள் கேட்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
பார் கவுன்சிலில் வழக்கறிஞர்கள் பதிவு செய்யும் முன் அவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளனவா என காவல்துறையினர் மூலம் விசாரணை நடத்துவது போலவும், காவல்துறையில் பணிக்கு சேர்பவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளனவா என விசாரணை நடத்துவது போலவும், ஆசிரியர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு எதிராக வழக்குகள் உள்ளனவா என காவல்துறையினர் மூலமாக ஏன் விசாரணை நடத்தக் கூடாது என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications