"விசுவாசமாக இருந்தாலும் பிராமணர்களுக்கு வாய்ப்பு இல்லை.." ஆனந்த் சீனிவாசன் பரபர.. என்ன மேட்டர்
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் கூட பிராமணர் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

பாஜக தனது தலைமையில் கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார்கள். இதற்கிடையே பாஜகவில் பிராமணர்கள் யாரும் வேட்பாளராக இல்லை என்று ஆனந்த் சீனிவாசன் சாடியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்: தமிழகத்தில் உள்ள முக்கிய பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன்.. இவர் பொருளாதாரம் சார்ந்து பல டிப்ஸ்களை வழங்கி வருகிறார். மற்றவர்களைப் போலப் பொருளாதாரம், சேமிப்பு ஆகியவற்றை குழப்பாமல் அனைவருக்கும் புரியும்படி எளிதாகச் சொல்வதே இவரது சிறப்பாகும். பொருளாதாரம் மட்டுமின்றி, இவர் காங்கிரஸ் கட்சியிலும் நீணட் காலமாகப் பயணித்து வருகிறார்.
சமீபத்தில் தான் இவருக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு துறைத் தலைவர் பொறுப்பு கிடைத்தது. அப்போது முதலே அவர் பல நேரங்களில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கிடையே இப்போது அவர் மீண்டும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலைச் சாடியுள்ளார். தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் லிஸ்டில் ஒரு பிராமணர்கள் கூட இல்லை என்பதை அவரது விமர்சனமாகும்.
காட்டமான விமர்சனம்: இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் தனது முதல் ட்வீட்டில், "ராஜாவுக்கு விசுவாசமாக இருந்தபோதிலும், தமிழகத்தில் பாஜகவில் இருந்து போட்டியிடத் தகுதியான பிராமணர் யாரும் இல்லை போல.. தேவையான நேரத்தில் பயன்படுத்திவிட்டுத் தூக்கி வீச மட்டுமே பாஜக அவர்களை வைத்துள்ளது போல.. மயிலாப்பூர் மற்றும் மேற்கு மாம்பலத்தில் இல்லையா என்ன" என்று விமர்சித்துள்ளார்.
அதேபோல அவர் தனது மற்றொரு ட்வீட்டில் என்னடா இது தமிழக பாஜகவில் ஒரு பிராமண வேட்பாளர்கூட இல்லையே? யாருமே தகுதியானவர்கள் இல்லையா? என்று விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
பாஜக: தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலை அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக எதிர்கொண்டது. இந்த முறை அதிமுக பாஜக கூட்டணி முறிந்துள்ள நிலையில், பாஜக தனது தலைமையில் கூட்டணியை அமைத்துள்ளது. அதில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 சீட்களிலும் அமமுகவுக்கு 2 சீட்களிலும் போட்டியிடுகிறது.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் ஓபிஎஸ் அணிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் யாரும் பிராமணர்கள் இல்லை என்பதே ஆனந்த் சீனிவாசனின் விமர்சனமாகும்.
நெட்டிசன்கள் சிலர் ஆனந்த் சீனிவாசன் கருத்துக்கு ஆதரவாகப் பதிவிட்டாலும் இன்னும் சிலர் அவரது காங்கிரஸ் கட்சியில் எத்தனை வேட்பாளர்கள் பிராமணர்கள் என்று பதிலுக்குக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications