ஏன் தனியாருக்கு? அம்மா உணவகத்திற்கே காலை உணவு தயாரிக்கும் ஆர்டர் கொடுங்க: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
சென்னை: சென்னையில் அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரைவார்க்க 2 ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும், அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

சென்னை மாநகராட்சியில் கல்வித்துறையின் கீழ் இயங்கும், 356 பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டத்தை, தனியார் வசம் ஒப்படைக்க, மாநகராட்சி திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
சென்னை மாநகராட்சியின் இந்த முடிவுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் உள்ள சுமார் 350க்கும் அதிகமான பள்ளிகளில், சுமார் 65,000க்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு, அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம், அம்மா உணவகங்களில் பணிபுரிவோருக்கு, நிலையான வருமானம் கிடைக்கப்பெற்று வந்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு, காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தனியாருக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முயன்றபோது, மாமன்றத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், அந்த முடிவைக் கைவிட்டனர். தற்போது, மீண்டும் தனியாருக்குத் தாரைவார்க்க, ஒப்பந்தம் கோரி இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கியதாக அறிவித்தது திமுக அரசு. அப்படி மேம்படுத்தப்பட்ட அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரைவார்க்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்?
கண்துடைப்புக்காகத் திட்டங்கள் அறிவிப்பது அல்லது தங்கள் லாப நோக்கங்களுக்காகத் திட்டங்களை மடைமாற்றுவது என, நான்கு ஆண்டுகளாக டிராமா மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக, சென்னை மாநகராட்சியையும், பள்ளிக் குழந்தைகளையும் அதற்குப் பயன்படுத்த முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தொடர்ந்து அம்மா உணவகங்களிலேயே, காலை உணவுத் திட்டத்திற்கான உணவு தயாரிக்கப்பட வேண்டும் என்றும், தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க முயற்சிப்பதை கைவிடவேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன். " எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications