Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணியம்மையார் திருமணம் தானா தந்தை பெரியாரிடம் இருந்து பேரறிஞர் அண்ணா பிரிய காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிடர் இயக்கத்தினரால் திராவிட மாதம் என கொண்டாடப்படுகிறது செப்டம்பர் மாதம். பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் (செப்டம்பர் 15), தந்தை பெரியார் பிறந்த நாள், திமுக உதயமான நாள் (செப்டம்பர் 17) என திராவிடர் இயக்கத்தினரின் கொண்டாட்டங்களுக்கான மாதம் இது.

தந்தை பெரியாரிடம் இருந்து பிரிந்துதான் அதாவது தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திடம் இருந்து பிரிந்துதான் திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணாவும் அவரது தம்பிமார்களும் உருவாக்கினர். காலச்சக்கரத்தில் இரு பெரும் இயக்கங்களிடையே மனக்கசப்புகள் ஆற்றப்பட்டு திராவிடர் மரபினம் வழிவந்த தமிழ்த் தேசிய இனத்தைப் பாதுகாக்கிற இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இயங்குகின்றன.

திராவிடர் இயக்கம் ஆல்போல் விருட்சமாய் தமிழர் இல்லந்தோறும் விழுதுகளுடன் வேர்பிடித்து நிற்கிறது. இன்றைக்கும் திராவிடர் இயக்கத்தில் விடைதெரியாத கேள்விகள், விவாதிக்கப்படாத பக்கங்கள் அவசியம் அற்றவையாக பரணில் கிடக்கின்றன. ஆனாலும் வரலாறு பேசியே வளர்த்தெடுக்கப்பட்ட திராவிடர் இயக்கத்தின் தன்வரலாறும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியதுதான்.

அண்ணாவின் விலகல்

அண்ணாவின் விலகல்

தந்தை பெரியாரின் பெருந்தளபதியாக விளங்கிய பேரறிஞர் அண்ணா, அவருடன் முரண்பட்டு விலகி தனி இயக்கம் காணவேண்டியது எதன் காரணமாக ஏற்பட்டது? பொத்தாம் பொதுவாக எல்லோரும் சொல்வது தந்தை பெரியார்- மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டதுதான் என்பதுதான். ஆனால் அதுவும் ஒரு காரணம் என்பதாகத்தான் சொல்ல முடியும் என்கின்றனர் திராவிடர் இயக்க ஆய்வறிஞர்கள்.

பெரியாரின் கொள்கை பாதை

பெரியாரின் கொள்கை பாதை

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திராவிடர் இயக்க மூத்த தலைவர்கள், தந்தை பெரியார் மேட்டுக்குடியில் பிறந்தவர்தான்; ஆனால் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எவை எல்லாம் காரணகர்த்தாக்களோ அத்தனையையும் தகர்த்து எறிய வேண்டும் என்பதில் மூர்க்கமாக இருந்தவர். அவர் என்ன நினைப்பார்? மக்கள் என்ன நினைப்பார்கள்? என்றெல்லாம் ஆராயக் கூடியவரும் அல்ல. எனக்குப் பட்டதை நான் சொல்கிறேன்.. உனக்கு அது சரி என படுகிறதா? என ஆய்வறிந்து - பகுத்தறிந்து ஏற்றுக் கொண்டால் என்னோடு வா என்பதுதான் பெரியாரின் பாணி. அதனால்தான் பகுத்தறிவுப் பகலவன் என தந்தை பெரியார் போற்றப்படுகிறார் என்கின்றனர்.

அண்ணாவின் கொள்கை பாதை

அண்ணாவின் கொள்கை பாதை

அதேநேரத்தில் தந்தை பெரியாரின் பாதையை பின்பற்றிய அத்தனை பேரும் அதே சிந்தனையோடும் அதே கொள்கையோடும் காலந்தோறும் பயணித்துவிடவும் இல்லை. தந்தை பெரியாருடன் தொடக்க காலம் முதலே முரண்பாடு கொண்டவர்கள் ஏராளம். அதனால் பெரியாரோடு வேறுபட்டு வெளியேறியவர்கள் ஏராளம். அப்படி வெளியேறியவர்களில் பேரறிஞர் அண்ணா, திமுகவின் உதயம் வகித்த பங்குவகிபாகம் என்பது மிக முக்கியமானது. தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் வேறுபட்ட பொதுப் புள்ளி என்பது 'பொதுமக்கள் என்ன நினைப்பார்கள்' என்பதை அடிப்படையாக கொண்டது.

பெரியார்- அண்ணா முரண்கள்

பெரியார்- அண்ணா முரண்கள்

தந்தை பெரியார் தனக்கு பட்டதை சரி என சொன்னார்; பேரறிஞர் அண்ணாவோ, வெகுமக்களிடம் இருந்து நாம் அன்னியமாகமல் பெரியார் கருத்துகளை சொல்ல வேண்டும் என்றார். அதனால்தான் தந்தை பெரியார், திராவிட நாடு விடுதலைக்காக கருஞ்சட்டைப்படை என்ற ராணுவ அமைப்பை உருவாக்கிய போது அதை ஏற்காதவராக அண்ணா இருந்தார்; திகவினர் கருஞ்சட்டை அணிய சொன்ன போது அண்ணா தயக்கம் காட்டினார். தந்தை பெரியாருடன் பயணித்த காலத்திலேயே கடவுள் இல்லை என்பதற்கு பதிலாக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என புதிய முழக்கத்தை முன்வைத்தார். இந்திய விடுதலையை பெரியார் துக்க நாள் என அறிவிக்க அதனை அண்ணா நிராகரிக்கவே செய்தார்.

மணியம்மையார் திருமணம்

மணியம்மையார் திருமணம்

இத்தகைய காலகட்டத்தில்தான் பெரியார்- மணியம்மையார் திருமணம் நிகழ்கிறது. அன்றைய காலகட்டத்தின் சட்டப்படி, பெண் ஒருவர் தத்து எடுக்கவும் முடியாது; தத்து எடுக்கப்படவும் முடியாது. ஆகையால் தமக்கு பின்னர் இயக்கத்தைப் பாதுகாக்க பெரியாருக்கு மணியம்மையாரை திருமணம் செய்வது என்பதைத் தவிர வேறுவழியே இல்லை. அதனால் மணியம்மையை திருமணம் செய்தார் பெரியார். இதனை அண்ணாவால் ஏற்க முடியவில்லை. வயதான பெரியாரின் இந்த திருமணம், கொள்கை வழி பயணத்துக்கு மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தக் கூடும் என அச்சப்பட்டார். அதனால் இதனை நிராகரித்தார். அதாவது மக்களின் சிந்தனை என்னவாக இருக்கும் என ஆராய்ந்து முடிவெடுத்தார் அண்ணா.

அண்ணா காட்டிய பாதை

அண்ணா காட்டிய பாதை

ஆம் பேரறிஞர் அண்ணாவின் இந்தப் பயணத்தை சற்றே ஆய்ந்து பார்த்தால், நியாயம்தான் என்றே எண்ணலாம். மக்களோடு மக்களாக நின்று மக்களிடம் இருந்து அன்னியப்படாமல் பெரியார் கருத்தை பேசியவர் அண்ணா. அப்படிப் பேசியதாலோ என்னவோ தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்தைவிட வலிமையான கட்டமைப்பு கொண்ட மாபெரும் இயக்கமாக திமுகவை அண்ணாவால் கட்டமைக்க முடிந்திருக்கிறது. அதன்விளைவாகத்தான் தேர்தல் அரசியலிலும் வென்று சரித்திரம் படைக்கவும் முடிந்திருக்கிறது.

மக்களிடம் செல்
மக்களோடு வாழ்
மக்களிடம் இருந்து கற்றுக் கொள்
மக்கள் தருவதை பெற்றுக் கொள்
மக்களை மேம்படுத்து- பேரறிஞர் அண்ணா

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+