ரஜினியின் காட்டமான அறிக்கைக்கு காரணம் என்ன?.. பரபரப்பு பின்னணி
Recommended Video

சென்னை: வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்க முடியாது என்று ரஜினியின் ஆக்ரோஷமான அறிக்கைக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பரில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். கட்சி தொடங்குவதற்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. இனி அம்புவிடுவது மட்டும்தான் பாக்கி என்றார். இந்த அறிவிப்புக்கு பின்னரே ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அமைத்தார்.
ஆனால் பேட்ட படப்பிடிப்புக்காக வாரணாசி சென்றுவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசியல் கட்சி தொடங்கும் பணிகள் 90 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது என்று கூறியிருந்தார்.

குளறுபடி
இதனிடையே ரஜினி மக்கள் மன்றத்துக்கு நிர்வாகிகளை நியமிப்பதும் அடுத்த நாளே அவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை நியமிப்பதும் என்று இருந்தது. இதிலிருந்தே நிர்வாகிகள் நியமனத்தில் ஏதோ குளறுபடி நடப்பது நன்றாகவே தெரிகிறது.

ரஜினி புகார்
ரஜினி மக்கள் மன்றம் மூலம் பணம் சம்பாதிக்கும் வேலைகளில் ஏற்கெனவே இறங்கிவிட்டதும், இதற்காக அந்த நிர்வாகியை நீக்கினால் நான் 30 ஆண்டுகள் மன்றத்தில் உள்ளேன். எனக்கு ஏன் பதவி இல்லை, மன்றத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க இவ்வளவு பணம் செலவு செய்தேன் என்றெல்லாம் இந்த நிர்வாகிகள் ரஜினிக்கு புகார் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி ஆலோசனை
இதனால் மன்றத்துக்குள் கடும் சலசலப்பு நிலவி வருகிறது. இதை தீர்த்து வைக்கவே நேற்றைய தினம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் முன்னணி நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட ஆலோசனையின்போது நீக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்து ரஜினி ஆலோசனை நடத்தியுள்ளார்.

எதற்கு
இந்த ஆலோசனைக்கு பின்னரே இன்று மிகவும் காட்டமாக அறிக்கையை ரஜினி அனுப்பியுள்ளதும் தெரிகிறது. ஆக ரஜினி மன்றத்திலும் பதவிக்காக நிர்வாகிகள் அடித்துக் கொள்வதைத்தான் ரஜினி மற்றவர்களை போல் அரசியல் செய்வதற்கு எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினி வெளிப்படுத்திய ஆதங்கம்
பணம் சம்பாதிக்கும் எண்ணம் இருந்தால் என்னுடன் யாரும் இருக்காதீர் என்று கடந்த ஆண்டு மே மாதம் கூறியதை மறந்து 30- 40 ஆண்டுகளாக தன் கட்டுப்பாட்டில் இருந்த ரசிகர்களே இன்று அரசியல் என்றவுடன் பணம், பதவியை எதிர்பார்க்கின்றனரே என்ற ஆதங்கத்தை ரஜினி வெளிப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.












Click it and Unblock the Notifications