ராஜ்நாத் சிங் தான் முதல் சாய்ஸ்! கருணாநிதி நாணயம் வெளியிட அழைத்தது ஏன்? அதிமுகவுக்கு ஸ்டாலின் பதிலடி
சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியின் நினைவாக 100 ரூபாய் நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் இன்று வெளியிட்டார். அதனை முதல்வர் ஸ்டாலின் பெற்று கொண்டார். இந்த விழாவுக்கு ராஜ்நாத் சிங்கை அழைத்ததால் திமுக தான் பாஜகவுடன் நெருக்கம் காட்டுகிறது என்று அதிமுக தலைவர்கள் விமர்சனம் செய்கின்றனர். இந்நிலையில் தான் விழாவுக்கு ராஜ்நாத் சிங்கை அழைப்பது தான் முதல் சாய்ஸாக இருந்தது என்றும், அதன் பின்னணி பற்றியும் முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்து அதிமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவை போற்றும் வகையில் 100 ரூபாய் நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டார். அதனை முதல்வர் ஸ்டாலின் பெற்று கொண்டார்.

அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் விழாவில் பேசினார். அப்போது கருணாநிதி நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியிட பாஜகவை சேர்ந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்தது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
கலைஞர் படத்தை தமிழக சட்டசபையில் அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ஓமந்தூராரில் கலைஞர் சிலையை அப்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலையை சோனியா திறந்து வைத்தார். முரசொலி அலுவலகத்தில் கலைஞர் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். இன்று கலைஞரின் நாணயத்தை ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்
இந்திய ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரணாக இருந்த கருணாநிதியின் உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வந்திருப்பது மிக மிக பொருத்தமானது தான். இதன்மூலம் 80 ஆண்டு பொது வாழ்க்கை, அரை நூற்றாண்டில் தமிழகத்தில் திறம்பட செயல்பட்ட கலைஞருக்கு இந்தியாவே சிறப்பு செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
கலைஞர் நாணயம் வெளியிட அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ராஜ்நாத் சிங்கிற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இயற்பியல் பேராசிரியராக வாழ்க்கையை தொடங்கிய ராஜ்நாத் சிங் தான் கொண்ட ஆர்வத்தால் அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏ, மாநில அமைச்சர் பதவிகளை வகித்த அவர் உத்தர பிரதேச முதல்வராக உயர்ந்து தற்போது பாதுகாப்பு துறை அமைச்சராக உள்ளார். கலைஞர் நினைவு நாணயம் வெளியிடும் விழாவுக்கு அழைக்க ராஜ்நாத் சிங் தான் முதல் சாய்ஸாக இருந்தார். ராஜ்சிங் கட்சி பாகுபாடுகளை மறந்த அனைவரிடமும் பாசிட்டிவ்வான ரிலேஷன்ஷிப்பை பின்பற்றி வருகிறார்'' என்று விளக்கம் அளித்தார்.
முன்னதாக கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவுக்கு பாஜகவை சேர்ந்த ராஜ்நாத் சிங் அழைக்கப்பட்டு இருப்பதை அதிமுக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில் திமுக தான் பாஜகவுடன் நெருக்கம் காட்டுவதாக அதிமுக தலைவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் ராஜ்நாத் சிங்கை அழைத்தது ஏன்? என்பது பற்றி மேடையில் பேசி பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications