கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விஷம் குடித்த நடிகர் லோகேஷ்.. தற்கொலைக்கு காரணம் என்ன? பரபர தகவல்
சென்னை: ஜீ பூம்பா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
மர்ம தேசம், ஜீ பூம்பா, விடாது கருப்பு உள்ளிட்ட சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து 90 ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பிரெண்டாக இருந்தவர் நடிகர் லோகேஷ்.
இவருக்கு இயக்குநர் பணியில் அதீத ஆர்வம் இருந்ததாக சொல்லப்படுகிறது. சில குறும்படங்களையும் இவர் இயக்கியுள்ளாராம். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் லோகேஷ் மயங்கிய நிலையில் கிடந்ததாக தெரிகிறது.

விஷம்
அவரை மீட்ட போலீஸார் அவர் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடப்பதை அறிந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

மருத்துவமனை
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின்படி கோயம்பேடு போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளார்கள். லோகேஷுக்கு திருமணமாகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து காஞ்சிபுரத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்தாராம். இதையடுத்து லோகேஷின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மாடம்பாக்கம்
அப்போது லோகேஷின் பெற்றோர் கூறுகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு அனிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு லோகேஷும் அனிஷாவும் மாடம்பாக்கத்தில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்படும். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு முற்றியது.

மனமுடைந்து தற்கொலை
இதையடுத்து அனிஷா லோகேஷிடம் இருந்து விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது லோகேஷுக்கு பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் தந்தது என்றனர் அவரது பெற்றோர். இதையடுத்து விவாகரத்து விஷயத்தால் மனமுடைந்து லோகேஷ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர்.

கோயம்பேடு பேருந்து நிலையம்
மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் ஒரு வேளை பஸ் நிலையத்தில் வைத்து அனிஷாவை அவர் பார்த்தாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அது போல் வேறு ஏதேனும் பிரச்சினைகள் லோகேஷிற்கு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications