சென்னை பள்ளிக்கரணை ஆணவ கொலை: கோமாவுக்கு சென்ற பிரவீனின் மனைவி! ஷர்மி தற்கொலைக்கு யார் காரணம்?
சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் ஆணவக் கொலையால் கணவரை இழந்த மனைவி தற்கொலை செய்தது ஏன் என்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
சென்னை பள்ளிகரணை அம்பேத்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (26). இவருக்கு ஜல்லடையாம்பேட்டை கணேஷ் நகரை சேர்ந்த ஷர்மிளா என்கிற ஷர்மிக்கு காதல் மலர்ந்தது. இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் பள்ளிக்கரணையில் தனியாக வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி டாஸ்மாக் கடை அருகே சென்ற பிரவீனை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிச் சாய்த்தது. இது குறித்து தாம்பரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் ஷர்மியின் அண்ணன் தினேஷ், அவரது நண்பர்கள் விஷ்ணுராஜ், ஸ்ரீராம், ஜோதிலிங்கம் , ஸ்ரீஃபன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். தனது தங்கை சாதி மறுப்பு திருமணம் செய்ததை எதிர்த்து பிரவீனை, தினேஷ் கொலை செய்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் பிரவீன் படுகொலைக்கு காரணமாக இருந்த ஷர்மிளாவின் பெற்றோர் துரைக்குமார்- சரளா, குடும்ப உறுப்பினர் நரேஷ் ஆகிய மூவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
அவர்களை கைது செய்யவும் இல்லை. இது ஷர்மியின் மனதை கடுமையாக பாதித்தது. தனது கணவரை இழந்து நிற்கதியாய் நிற்பதற்கு காரணமே தனது தாய், தந்தைதான், ஆனால் அவர்களை கைது செய்யாமல் இருப்பது குறித்து அவ்வப்போது தனது மாமனார் வீட்டாரிடம் ஷர்மி கூறி கவலைப்பட்டு வந்ததாக தெரிகிறது.
அவர்கள் மீது புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த ஷர்மி கடந்த 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற போது கழுத்து எலும்பு உடைந்து நரம்புகள் பாதித்ததால் ஷர்மி கோமா நிலைக்கு சென்றார்.
இதையடுத்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முதலே அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஷர்மி உயிரிழந்தார். தனது கணவரின் கொலைக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்திலேயே ஷர்மி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
மேலும் அவர் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை போலீஸார் கண்டெடுத்தனர். அதில் எனது கணவர் சென்ற இடத்திற்கே நானும் செல்கிறேன். என் சாவுக்கு காரணம் துரைகுமார், சரளா, நரேஷ் உள்ளிட்டோர்தான் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications