கொடநாடு வழக்கில் சாட்சியாக எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்க கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: தற்போது முதல்வராக இல்லாத நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர் தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிச்சாமியை ஏன் விசாரிக்க கூடாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரை கொலை செய்து, ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக ஷோலூர்மட்டம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்ததுடன், மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அதில், ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின் நடந்த கொள்ளையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காணாமல் போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்கு தான் தெரியும் எனவும், புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பது அனைவருக்கும் தெரியும் என வாதிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தி, சம்பந்தமில்லாமல் முதல்வருக்கு சம்மன் அனுப்ப கேட்க முடியாது என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் , கொடநாடு கொலை , கொள்ளை சம்பவம் வழக்கு தொடர்பாக மேல் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். இதையடுத்து, தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக இல்லையே எனத் தெரிவித்த நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications