நாடே திரும்பி பார்க்க.. ஆடம்பர திருமணம் செய்த சுதாகரன்.. இப்போ நிலையை பார்த்தீங்களா!
சென்னை: பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா மற்றும் இளவரசி ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், சுதாகரன் இன்னமும் தண்டனை அனுபவித்து வருகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்ததை தொடர்ந்து சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூர் சிறையிலிருந்து கடந்த மாதம், விடுதலை செய்யப்பட்டனர்.
பெங்களூரில் தனியார் சொகுசு விடுதியில் ஓய்வெடுத்த நிலையில், திங்கட்கிழமை சென்னை திரும்பினர். ஆனால், சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் ஒரே நாளில் சிறைக்கு சென்றபோதிலும், சுதாகரன் இன்னும் ரிலீஸ் செய்யப்படவில்லை.
சசிகலா ரிலீஸ்
இதற்கு காரணம் இருக்கிறது. 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.10 கோடி அபராதத் தொகை விதிக்கப்பட்டிருந்தது. சசிகலா, இளவரசி தரப்பில் அவர்களது வழக்கறிஞர்கள் அபராதத் தொகையை செலுத்தினர். எனவே, சசிகலா ஜனவரி 27ம் தேதியும், இளவரசி 5ம் தேதியும் விடுதலை செய்யப்பட்டனர். அதேநேரம் சுதாகரனுக்கு ரூ.10 கோடி அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை.
சுதாகரன் அபராதம்
அபராதத் தொகை செலுத்தாவிட்டால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அபராதத் தொகை செலுத்தப்பட்டிருந்தால் டிசம்பர் மாதம், எல்லோருக்கும் முன்பாக, சுதாகரன் ரிலீஸ் செய்யப்பட்டிருப்பார். ஏனெனில், சுதாகரன் 1996 முதல் 2017 வரை இந்த வழக்குக்காக 92 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அதை கழித்து விட்டு தண்டனை காலம் முன்கூட்டியே முடிந்திருக்க வேண்டும்.
பக்திமானாக மாறிய சுதாகரன்
அதேநேரம், 10 கோடி செலுத்த அவரது குடும்பம் கஷ்டப்படுகிறது. அவர் திருமண உறவு வைத்துள்ள நடிகர் சிவாஜி குடும்பம் பணம் திரட்ட முயன்றும் அது முடியவில்லை. எனவே அபராதம் செலுத்தாமல் சிறையில் இருக்கிறார். படாடோபமாக காட்சியளித்த சுதாகரன் இப்போது விபூதி பூசி, கடவுள் படம் முன்பாக அடிக்கடி தியானம் இருந்து வருகிறாராம். சிறையில் இருந்தபோது கூட சசிகலாவை பார்க்க சென்றவர்கள் சுதாகரனை சந்தித்து பேசாமல் தவிர்த்ததால் மனமுடைந்து போய் இருக்கிறார்.
பணம் திரட்ட வாய்ப்பு
சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகன்கள்தான் டி.டி.வி.தினகரன், வி.என்.சுதாகரன், பாஸ்கரன் ஆகும். அந்த வகையில், சுதாகரன் நிலைமையை அறிந்துள்ள சசிகலா, விரைவிலேயே பணம் திரட்டி அபராத தொகையை செலுத்த முயற்சிப்பார் என்று கூறப்படுகிறது.
ஆடம்பர திருமணம்
சசிகலாவும், ஜெயலலிதாவும் மிக நெருங்கிய தோழிகளாக இருந்தபோது, சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார் ஜெயலலிதா. அப்போதுதான் சிவாஜியின் மகள் வழிப் பேத்தியான சத்தியலட்சுமியுடன் சுதாகரனுக்குத் திருமணம் நடந்தது. இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு அது ஆடம்பரமாக நடைபெற்றது. ஜெயலலிதா மீதான பெரும் விமர்சனங்களில் ஒன்றாக அந்த ஆடம்பர திருமணம் மாறியது. ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரியில் பல கோடி செலவில் திருமணம் நடத்தப்பட்டது. ஆனால் பிறகு இவருடனான தொடர்பை ஜெயலலிதா துண்டித்தார். இப்படி ஆடம்பரமாக வாழ்ந்த சுதாகரன் இன்று, அபராதம் கட்ட வழியில்லாமல் சிறையில் இருக்கிறார்.