தமிழகத்துக்கு 20 எம்பிகள் எக்ஸ்ட்ரா கிடைப்பாங்க! ஆனாலும் எதிர்ப்புக்கு காரணம் என்ன? விரிவான அலசல்!
சென்னை: நாடு முழுவதும் பேசப்படும் பொருளாக தொகுதி மறுவரையறை மாறி இருக்கிறது. தென் மாநிலங்களில் அதிகாரக் குரலை ஒடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக தமிழகத்திலிருந்து போர் குரல்கள் எழத் தொடங்கி இருக்கின்றன. இன்று தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. உண்மையில் தொகுதி மறுவரையறையால் தமிழகத்தின் எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்குமா? குறையுமா? தமிழகத்துக்கு என்ன பாதிப்பு? என்பது குறித்து பார்க்கலாம்.
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான முக்கியமான 3 மசோதாக்கள் அறிமுகமாகியுள்ள நிலையில், அவற்றின் மீது இன்று நடைபெற உள்ள வாக்கெடுப்பு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை உயரும் என்றாலும், வட மாநிலங்களின் கை ஓங்கும் என்பதால் தான் இது தமிழக அரசியலில் அதிக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொகுதி மறுவரையறை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த 3 மசோதாக்களில் முக்கியமானது மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2023ஆம் ஆண்டு மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்படுவதாக மத்திய அரசு கூறி வருகிறது. அதற்காகத்தான் தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு
இப்போது நாட்டில் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆனால் புதிய திட்டத்தின்படி, இந்த எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மறுவரையறை நடைமுறைக்கு வந்தால், மாநிலங்களுக்கு கிடைக்கும் மக்களவைத் தொகுதி எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
மக்களவைத் தொகுதிகள்
இந்த மாற்றத்தின் அடிப்படையில், தமிழகத்தில் தற்போது உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் 59 ஆக அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் தென் இந்தியாவின் மற்ற மாநிலங்களான கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் தொகுதி எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
லோக்சபா எம்பி எண்ணிக்கை
இந்த 3 மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக எதிர்க்கட்சிகள், இந்த மசோதாக்கள் மாநிலங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வை பாதிக்கக்கூடும் என்றும், சில மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றன. அதே நேரத்தில், மத்திய அரசு இந்த மசோதாக்கள் மகளிர் அரசியல் பங்கேற்பை அதிகரிக்கவும், மக்கள் தொகை மாற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் தொகுதிகளை மறுசீரமைக்கவும் அவசியமானவை என்று விளக்கி வருகிறது.
வாக்கெடுப்பு
மசோதாக்களை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா என்பது குறித்த முதல் கட்ட வாக்கெடுப்பில் ஆளும் தரப்புக்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்ததால், அவை அதிகாரப்பூர்வமாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் பின்னர் தற்போது இந்த மசோதாக்கள் மீது இறுதி கட்டமாக முக்கியமான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பெரும்பான்மை
ஆனால் இந்த மசோதாக்கள் சட்டமாக மாற வேண்டுமெனில், சாதாரண பெரும்பான்மை மட்டும் போதாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. தற்போது ஆளும் கூட்டணியிடம் அந்த அளவுக்கு முழுமையான பெரும்பான்மை இல்லை என்பதால், இந்த மசோதாக்கள் நிறைவேறுமா இல்லையா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
ஏன் எதிர்ப்பு?
ஏற்கனவே சொன்னது போல இந்த தொகுதி மறுவரையறையால் தற்போது இருக்கும் 39 என்ற தமிழக எம்பிக்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரிக்கும். ஆனால் இது வெறும் 0.2 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் எண்ணிக்கை உயரும். அதாவது அந்த மாநிலங்களுக்கு பாதிக்கு பாதி கூட எம்பிக்கள் கிடைப்பார்கள். இதனால் தென் மாநில எம்பிக்கள் ஆதரவு தேவையில்லை என்ற நிலை உருவாகலாம் என்பதே தென்னிந்தியாவிலிருந்து எழும் எதிர்ப்புக்கு காரணம்.












Click it and Unblock the Notifications