தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை நியமிப்பதில் தாமதம் ஏன்.. வெளியான தகவல்
சென்னை: தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஸ்டாலின் திமுக அரசு பதவியேற்ற போது, அவரது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வழுத்து வரும் நிலையில், அவரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணங்களை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. சரியாக 10 வருடங்கள் கழித்து மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது கடந்த மே மாதம் 7ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினும், 34 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டார்கள். அப்போது, முதல்வரின் மகனான உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. திமுகவில் பலரும் எதிர்பார்த்த போதும், உதயநிதிக்கு அமைச்சர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. அவருக்கு அமைச்சர் மெய்யநாதனிடம் இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. கூடுதலாக முதல்வரின் வசம் இருந்த சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு, ஊரக கடன் ஆகிய துறைகள் கூடுதலாக உதயநிதிக்கு வழங்கப்பட்டது. இதனால், அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளாக தமிழக அமைச்சரவையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இருந்து வந்தது இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளார் என அண்மையில் தகவல்கள் வெளியானது. அப்போது முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன்பதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியானது.
இதை சில அமைச்சர்களே உறுதிப்படுத்தினார்கள். இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி ஒரு தகவல் வெளியானது. இதனப்டி உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "அப்படி எதுவும் எனக்கு தகவல் வரவில்லை" என்று அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்படி, கடந்த ஒரு மாத காலமாகவே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை ஒரு போதும் முதல்வர் ஸ்டாலின் உறுதிப்படுத்தவில்லை.. உதயநிதி ஸ்டாலினும் இதுபற்றி எப்போதும் கருத்தக்கூறியது இல்லை..
இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி, முதல்வர் மு.க.ஸ்டாலினும் 17 நாள் பயணமாக நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இந்த சூழலில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகவும் நியமிக்கப்படவில்லை.. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தே பணிகளை கவனிப்பேன் என்று அறிவித்துவிட்டு சென்றார். சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில், விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது. இதில், அவர் ஜாமீனில் நிச்சயமாக விடுதலையாவார் என திமுக தலைமை நம்பிக்கையில் உள்ளது செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டால், மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்றும், செந்தில் பாலாஜி வகித்து வந்த மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை ஆகியவை மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்கும் காலக்கட்டத்தில் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதவிர முக்கிய அமைச்சர் ஒருவர் உள்பட 3 அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்றும் அதில், திருவள்ளூர், சேலம் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும், தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்கிறார்கள்
இதுபற்றி சென்னையில் செய்தியாளர்கள் கேள்வியும் எழுப்பினார்கள். நீங்கள் அமெரிக்கா சென்று வந்த பின்னர் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின் மாறுதல் ஒன்றுதான் மாறாதது. பொறுத்திருந்து பாருங்கள் என சிரித்தப்படி கூறிவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications