"செம அடி".. வேலுமணி போட்ட "ஸ்கெட்ச்".. திணறி போன திமுக.. சுழற்றியடித்த கொங்கு.. என்ன காரணம்?
கொங்கு மண்டலத்தில் திமுக இந்த முறையும் கோட்டை விட்டுள்ளது
சென்னை: ஏன் தமிழகத்தின் மேற்கு மண்டலம் விடாமல் அதிமுகவை தூக்கிப் பிடித்திருக்கிறது.. திமுக ஏன் கொங்குவில் கால் பதிக்க முடியவில்லை.. இதற்கு ஜாதி மட்டுமாக இருக்க வாய்ப்பில்லை.. அப்படியானால் என்னதான் காரணம்?
இப்போது தேர்தலுக்கு பிறகு நிலைமை எப்படி இருக்கிறது என்றால், தெற்கு, வடக்கு மண்டலங்களில் திமுக வலுவாகி உள்ளது.. அதேசமயம் மேற்கு மண்டலத்தில் கோட்டை விட்டுள்ளது..
கொங்கு கொத்தோடு வரும் என்று பார்த்தால், ஒத்தையாக வந்துள்ளது.. இதற்கு என்ன காரணம்? கொங்கு அதிமுகவின் அபார வெற்றிகளை இது வெறும் சாதீய காரணங்களில் உள்ளடக்கிவிட முடியுமா?
திமுக வசம் சென்னை, வடக்கு, டெல்டா, தெற்கு மண்டலங்கள்; அதிமுகவை காப்பாற்றிய 'கொங்கு'
கவுண்டர்கள்
எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா, தினகரன் காலத்தில் இல்லாத அளவுக்கு, கவுண்டர்களின் சாதி உணர்வு இப்போது அதிமுகவுக்குள் அதிகமாக ஊடுருவி உள்ளதை மறுக்க முடியாது.. அன்று, பூனையும் எலியுமாய் பதவிகளில் இருந்த கவுண்டர் சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள்கூட இன்றைய அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் இணக்கமாகி இருப்பதை காண முடிகிறது.
வேலுமணி
எனவே, கவுண்டர்கள் லாபியால் மட்டுமே இன்று அதிமுக வெற்றியை சுவைத்துள்ளதா என்றால் அப்படியும் உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில் வேலுமணிக்கு நிகரான பணம் மற்றும் சாதீய செல்வாக்குடைய வேட்பாளர்தான் திமுகவிலும் நிறுத்தப்பட்டார்.. அப்படியென்றால், இருவருக்குமான சாதி ஓட்டுக்கள் பிரிந்து, 3வது நபருக்குதானே அது சாதகமாகி போயிருக்கும்? எனவே, அதிமுகவின் வெற்றிக்கு முழுக்க முழுக்க சாதி தான் காரணம் என்று சொல்ல முடியாது.
ஒர்க் அவுட்
அப்படியானால் என்னதான் காரணம்? கடந்த 2019 எம்பி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் க்ளீன் ஸ்வீப் ஆனபிறகு அதிமுக சுதாரித்து கொண்டது.. இந்த முறை, எங்கு தோற்றாலும் கொங்குவை மட்டும் விட்டுவிடக்கூடாது என்பதில் அதிமுக முனைப்பு காட்டியது.. முக்கியமாக வேலுமணியின் ஸ்கெட்ச் அபாரமாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது.. இந்த தேர்தலில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு வேலுமணி தான் பொறுப்பாளர்... அவர் யாரை சொல்கிறாரோ அவர்தான் அந்தந்த பகுதியின் வேட்பாளர்..
திமுக
கூட்டணி கட்சியைகூட அவர் கண்டுகொள்ளவில்லை.. தன் தரப்பு வேட்பாளர் விஷயத்தில் அவர் கறாராக இருந்தார்.. அதேபோல முந்தைய தேர்தலை காட்டிலும் இந்த முறை தாராளமயத்தில் அதிக விழிப்புடன் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதிமுகவின் திட்டமிட்ட களப்பணி + பண பலம்.. இவற்றிற்கு திமுகவால் ஈடுகொடுக்க முடியவில்லை.. இதுவே இன்றைய கொங்குவின் வெற்றிக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
கூட்டணி
இது மட்டுமே காரணம் என்று எடுத்து கொள்ளமுடியுமா? அப்படியும் சொல்லிவிட முடியாது.. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்குகள் கோவையில் திமுக கூட்டணிக்கு பின்னடைவாகியுள்ளது... வாக்குப்பதிவு தினத்தன்று இந்த தெற்கு தொகுதியில் யாருக்கு ஓட்டுக்கள் அதிகளவு டிரான்ஸ்பர் ஆனது என்பது குறித்து தகவல்கள் சில கிடைத்தன.. இந்த தெற்கு பகுதி இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதியாம்.. இங்குதான் திமுகவுக்கு வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது என்று சொல்லப்பட்டது.
கமல்
இந்த வாக்குகள் பெரும்பாலும் கமலுக்கு டிரான்ஸ்பர் ஆனதாகவும் சொல்லப்பட்டது.. எப்போதுமே திமுகவை கைதூக்கி விடுவதில் இஸ்லாமியர்களுக்கு பெரும்பங்கு இருந்து வருகிறது.. அப்படி இருக்கும்போது, முதல்முறையாக கமல் போட்டியிட்டதால், ஒருவித எதிர்பார்ப்புகளை முன்வைத்தே இந்த வாக்குகள் மய்யத்துக்கு சென்றிருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்லி இருந்தார்கள். அதுதான் காரணமா? அல்லது சிறுபான்மையினர் ஓட்டுக்களை கொங்குவில் சுதாரிக்க திமுக தவறிவிட்டதா என்பதையும் ஆராய வேண்டி உள்ளது.
வெறுப்புணர்ச்சி
அப்படியென்றால், இவைகள் மட்டும்தான் காரணம் என்று எடுத்து கொள்ளலாமா என்றால் அப்படியும் சொல்லிவிட முடியாது.. காரணம், திமுக கூட்டணி மீதான வெறுப்புணர்ச்சி இன்னமும் கொங்கு மக்களிடம் காணப்படுகிறது.. குறிப்பாக 10 வருஷத்துக்கு முன்பு திருமாவளவன் பேசிய பேச்சின் கோபநெடி இன்னமும் குறையவில்லை.. ஒருவேளை விசிகவுடன் கூட்டணி இல்லாவிட்டால், மேலும் கூடுதலான வாக்கு வங்கியை திமுக பெற்றிருக்கலாமோ? என தெரியவில்லை.
திமுக
நேற்றெல்லாம் கோவை பகுதியினரை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் பல கருத்துக்களைப் பார்க்க முடிந்தது. எல்லோரும் திமுகவை தாங்கினால் நீங்கள் மட்டும் இப்படி அதிமுகவை தூக்கி விட்டு விட்டீர்களே என்று பலரும் திட்டக் கூட செய்தனர். ஜாதிதான் காரணமா என்றும் பலர் கேட்டதைக் காண முடிந்தது. ஆனால் நிச்சயம் ஜாதி மட்டும் காரணமாக இருக்க முடியாது.
கொங்கு
அதிமுக மீது கொங்கு பகுதியினருக்கு இவ்வளவு பிடித்தம் இருக்க வேறு ஏதோ முக்கியக் காரணம் இருக்க வேண்டும். அதேபோல திமுக மீது ஏதோ ஒரு வகையான கடும்கோபமும் இருக்க வேண்டும. அதை திமுகவினர் சரியாக புரிந்து கொண்டு சரி செய்யாதவரை கொங்கு மண்டலத்தில் இரட்டை இலைக்கு வாட்டமே இருக்க வாய்ப்பில்லை. கொங்குவில் திமுக ஆழமாக இறங்கி நிறைய வேலை பார்க்க வேண்டி உள்ளது என்று மட்டும் தெரிகிறது..!