சென்னையில் தொழிலதிபர், தங்க நகைக்கடை அதிபர் வீடுகளில் ED ரெய்டு ஏன்? அரசியல் பிரமுகர்களின் பினாமியா?
சென்னை: தமிழகம் முழுவதும் தற்போது தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், நகைக்கடை அதிபர்கள் உள்ளிட்டவர்களை குறிவைத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின் அமைப்புகள் தொடர்ந்து சோதனை நடத்துவது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் யார் அரசியல் கட்சி பிரமுகர்களின் பினாமி என்பதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னையில் அதிகாலையிலேயே வருமான வரித்துறை சோதனை, அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு என்று ஊடகங்ககளிலும், செய்தி வலைதளங்களிலும் நீங்கள் அதிகம் பார்த்திருப்பீர்கள். இந்த தொழிலபதிருக்கு நெருக்கமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை என்றெல்லாம் பார்த்திருப்பீர்கள். முன்பு குறைவாகவே இருக்கும்.

அமலாக்கத்துறை ரெய்டு ஏன்
ஆனால் இப்போது தமிழ்நாட்டில் தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், நகைக்கடை அதிபர்கள் உள்ளிட்டவர்களை குறிவைத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் அடிக்கடி சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றன. ஒரு சிலரை கையும் செய்துள்ளன. சாதாரண அரசியல் கட்சி பிரமுகர்கள் தொடங்கி மிக முக்கியமான அரசியல் கட்சி தலைவர்கள் கூட இதில் தப்பவில்லை.. அவர்களும் வருமானவரித்துறை அமலாக்கத்துறையில் ரெய்டில் சிக்கி வழக்குகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.
சைதாப்பேட்டையில் சோதனை
சென்னையிலும் இந்த நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கும் தொழிலதிபர் ராமகிருஷ்ண ரெட்டியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தியிருந்தார்கள். காலை 8 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. அவருக்கு தொடர்பான 3 இடங்களில் சோதனை நடைபெற்றது.
நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரெய்டு
இதேபோல சென்னை கீழ்ப்பாக்கம் தம்புசாமி தெருவில் வசிக்கும் மோகன்லால் கட்டாரியா என்ற நகைக்கடை அதிபர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள அவருக்கு சொந்தமான மொத்த வியாபார நகைக்கடையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை நேற்று மாலை வரை நீடித்தது.
ஏற்கனவே பதிவான வழக்குகள்
பொதுவாக இதுபோன்ற சோதனைகள் வெறும் ரகசிய தகவல் அடிப்படையில் மட்டுமின்றி, சி.பி.ஐ. மற்றும் தமிழக போலீசார் ஏற்கனவே பதிவு செய்துள்ள வழக்கின் அடிப்படையில் முறைகேடான பண பரிமாற்ற சட்டப்பிரிவின் கீழ் இந்த சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இன்னும் தெளிவாக சொல்வது என்றால், தமிழக போலீசார் ஏதாவது ஒரு வழக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக பதிவு செய்தால் அமலாக்கத்துறை அந்த வழக்கில் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்கள்.
அரசியல் கட்சி பினாமிகள்
அந்த வழக்கு எப்போது பதிவு செய்யப்பட்டது என்றாலும் நடவடிக்கை எடுக்க முடியும். அப்படித்தான் அண்மைக்காலங்களில் சோதனை தீவிரமாக நடக்கிறது. அரசியல் கட்சி பிரமுகர்களின் பினாமிகள் யாராவது சிக்குவார்கள் எனற் என்ற சந்தேகத்தின்பேரில் இதுபோன்ற சோதனையை அமலாக்கத்துறை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. எனினும் அமலாக்கத்துறை சோதனையின் பின்னணி குறித்து எதுவும் வெளிப்படையாக கூறியது கிடையாது. சோதனை நடந்தப்பட்ட பின்னர் தகவல்கள் வெளியிடும். அவ்வளவு தான். ஒவ்வொரு முறையும் சோதனை முடிந்த பின்னர் உரிய தகவல் வெளியிடுவதை மட்டும் அமலாக்கத்துறை வழக்கமாக வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications